கோலி சொன்னது கரெக்ட்டுதான்.. கவாஸ்கரின் மூக்கை உடைத்த கம்பீர்

By karthikeyan VFirst Published Nov 28, 2019, 2:05 PM IST
Highlights

கங்குலி தலைமையிலான இந்திய அணி குறித்து, விராட் கோலி கூறியது சரிதான் என்று அவருக்கு ஆதரவாகவும் கவாஸ்கருக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார் கவுதம் கம்பீர். 
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக கெத்தாக வலம்வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்ற இந்திய அணி, இந்தியாவில் வைத்து தென்னாப்பிரிக்காவையும், அதைத்தொடர்ந்து தற்போது வங்கதேசத்தையும் ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 

இந்த மூன்று தொடர்களிலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் என தொடர்ச்சியாக மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்திய அணிக்கு அதிகமான வெற்றிகளை குவித்து கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். கோலி தலைமையில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துவருகிறது. வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதன்முறையாக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆடிய இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் அபார வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் என்பது மனரீதியான போராட்டம். டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகும் முறையையும் ஆதிக்கம் செலுத்துவதையும் தாதா தலைமையிலான அணியிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம். தாதா தலைமையிலான அணிதான் எங்களுக்கு முன்னோடி. அவர் காட்டிய வழியில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கோலி தெரிவித்தார். 

கேப்டன் கோலியின் கருத்துடன் முரண்பட்ட கவாஸ்கர், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்துவதை தொடங்கிவைத்தது தாதா தான் என்று கோலி கூறினார். தாதா பிசிசிஐயின் தலைவராக இருப்பதால், அவரை கௌரவப்படுத்த வேண்டும் என்பதற்காக கோலி புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால், இந்திய அணி 1970-80களிலேயே வெற்றிகளை குவித்துள்ளது. அப்போதெல்லாம் கோலி பிறக்கவேயில்லை. கோலி மட்டும் இல்லை.. நிறைய பேர் 2000ம் ஆண்டில்தான் இந்திய கிரிக்கெட் வெற்றி பாதையில் நடைபோட தொடங்கியதாக நினைக்கிறார்கள். ஆனால் 1970களிலேயே இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்துள்ளது. 1986ல் வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளது, தொடரை டிரா செய்துள்ளது என்று காட்டமாக தெரிவித்தார். 

இந்நிலையில், இந்த விஷயத்தில் கோலியின் கருத்துக்கு ஆதரவாக தனது குரலை பதிவு செய்துள்ளார் கம்பீர். இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், விராட் கோலி சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனாலும் அவர் சொன்னது நியாயம்தான். கங்குலியின் தலைமையில் தான் இந்திய அணி வெளிநாடுகளில் அதிகமான வெற்றிகளை பெற தொடங்கியது என்பதில் சந்தேகமில்லை.

கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் கங்குலி முன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த பலரின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தியதே தவிர, வெளிநாடுகளில் அல்ல. கங்குலியின் கேப்டன்சியின் கீழ்தான் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை அதிகமாக பெற தொடங்கியது. எனவே கங்குலி குறித்து கோலி சொன்ன கருத்துடன் நான் உடன்படுகிறேன் என்றார். 
 

click me!