டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி இதுவாகத்தான் இருக்கும்..! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 16, 2021, 10:45 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி எதுவாக இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் கணித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர்  17 தொடங்கி நவம்பர் 14 வரை நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி உட்பட அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன.

இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வெல்லவில்லை என்ற தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. இந்திய அணி வெல்வதற்கு அணி தேர்வு மிக முக்கியம்.

அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி எதுவாக இருக்கும் என முன்னாள் வீரர் சபா கரீம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், 3ம் வரிசையில் கேப்டன் விராட் கோலி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என சபா கரீம் தெரிவித்துள்ளார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். ஸ்பின்னர்களாக பேட்டிங்கும் ஆடத்தெரிந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரையும், 3வது ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரை எடுத்துள்ளார். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காது என சபா கரீம் கணித்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக நடராஜன், தீபக் சாஹர், பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகிய நால்வரையும் எடுத்துள்ளார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருப்பதால், அவர் கூடுதல் பவுலிங் ஆப்சனாக இருப்பார். ஃபாஸ்ட் பவுலர் ஷமிக்கும் இடம் கிடைக்காது என்று சபா கரீம் கணித்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில், சாஹல் மற்றும் ஷமி ஆகிய 2 முக்கியமான வீரர்களுக்கு இடம் கிடைக்காது என்று சபா கரீம் கணித்துள்ளார்.

சபா கரீம் கணித்துள்ள இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், பும்ரா, ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.
 

click me!