கங்குலியின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்..! தாதா சௌக்கியமா..?

By karthikeyan VFirst Published Jun 20, 2020, 2:40 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவிவருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 4 லட்டத்தை நெருங்கிவிட்டது. 12,971 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. அதற்கடுத்தபடியாக டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றி கொரோனா வைரஸ் தொற்றிவருகிறது. எம்பி.,க்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். 

இந்தியாவில் இதுவரை கிரிக்கெட் வீரர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர் டௌஃபிக் உமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். ஷாஹித் அஃப்ரிடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் சொந்த அண்ணன் மனைவிக்கும், அவரது(அண்ணன் மனைவியின்) தாய், தந்தையருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

சவுரவ் கங்குலியின் சொந்த அண்ணன் ஸ்னேஹாசிஸ் கங்குலி. அவரும் கிரிக்கெட் வீரர் தான். ரஞ்சி போட்டிகளில் மட்டும் ஆடியிருக்கிறார். தற்போது, மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக இருந்துவருகிறார். அவரது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் மற்றும் உதவியாளர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

கங்குலியின் அண்ணன் மனைவிக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், அவரது அண்ணன் ஸ்னேகஷிஸும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கங்குலியின் அண்ணன் குடும்பம், கங்குலியுடன் வசிக்கவில்லை. கங்குலி கொல்கத்தாவின் பெஹெலா பகுதியில் வசித்துவருகிறார். கங்குலியின் அண்ணன் குடும்பம் கொல்கத்தாவின் மோமின்புர் பகுதியில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது. 
 

click me!