
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், ராசி வாண்டர் டசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), ட்வைன் ப்ரிட்டோரியஸ், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக ஆடிய 21 பந்தில் 34 ரன்கள் அடித்தார். நன்றாக அடித்து ஆடிய இஷான் கிஷன் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் பெரிதாக அடித்து ஆடாவிட்டாலும் 35 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். ஆனால் ரிஷப் பண்ட்(5) மற்றும் ஹர்திக் பாண்டியா(9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அக்ஸர்படேலும் 10 ரன் மட்டுமே அடித்தார்.
14வது ஓவரில் களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் முதல் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கமுடியாமல் திணறினார். இன்னிங்ஸின் 19வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த தினேஷ் கார்த்திக், கடைசி ஓவரின் 4 மற்றும் 5வது பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசி 21 பந்தில் 30 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். தினேஷ் கார்த்திக்கின் ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 148 ரன்கள் அடித்த இந்திய அணி, 149 ரன்கள் என்ற கடினமும் இல்லாத எளிதும் இல்லாத ரெண்டுங்கெட்டான் இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.