Kohli vs BCCI: அது உங்க வேலையே கிடையாதே கங்குலி; அதுக்குதானே தேர்வாளர்கள் இருக்காங்க! முன்னாள் வீரர் விமர்சனம்

By karthikeyan VFirst Published Dec 22, 2021, 7:38 PM IST
Highlights

விராட் கோலி விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார்.
 

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.

விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர விரும்பிய கோலியை நீக்கியது விமர்சனத்துக்குள்ளானதால், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார்.

ஆனால் தென்னாப்பிரிக்காவிற்கு கிளம்புவதற்கு முன்பாக பிரஸ் மீட்டில் பேசிய விராட் கோலி, நான் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கூறியபோது, அதை பிசிசிஐ தரப்பில் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. என்னை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக கடைசி நேரத்தில் தான் தெரிவித்தனரே தவிர, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றார் கோலி.

பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்துக்கு கோலியின் கருத்து முற்றிலும் முரண்பாடாக இருந்ததையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் விவாதப்பொருளாகவும் உருவெடுத்தது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். விராட் கோலியிடம் முன்கூட்டியே கேப்டன்சி நீக்கம் குறித்து தெரியப்படுத்தியிருக்கலாம் என்பதே முன்னாள் வீரர்கள் பலரது கருத்து.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார், இந்த மொத்த சம்பவமும் துரதிர்ஷ்டவசமானது. பிசிசிஐ ப்ரொஃபஷனலாக இந்த விஷயத்தைல் கையாண்டிருக்கலாம். விராட்கோலியை கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கங்குலி கூறினார். அது தேர்வாளர்களின் வேலையே தவிர, கங்குலியின் வேலையில்லை. அவர் பிசிசிஐ தலைவர். தேர்வாளர்களுக்கும் கேப்டனுக்கும் இடையேயான விஷயத்தில் கங்குலி தலையிட்டிருக்க வேண்டியதே இல்லை. ஒரு கேப்டனை நியமிப்பதும் நீக்குவதும் தேர்வாளர்களின் வேலை. அது கங்குலியின் அதிகாரத்தின் கீழ் வரவே வராது. இந்திய கிரிக்கெட்டுக்காக மிகச்சிறந்த பங்காற்றியுள்ள விராட் கோலியை இன்னும் கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்று திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
 

click me!