சுஷாந்த் சிங்கிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை கடைசி வரை என்னால் நிறைவேற்ற முடியல..! கிரிக்கெட் வீரர் வேதனை

By karthikeyan VFirst Published Jun 17, 2020, 2:58 PM IST
Highlights

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை என கிரிக்கெட் வீரர் வேதனை தெரிவித்துள்ளார். 
 

பாலிவுட் திரையுலகில் வளர்ந்துவந்த இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெறும் 34 வயதே ஆன இளம் நடிகரான சுஷாந்த், எந்தவித சினிமா பின்புலமுமின்றி சொந்த முயற்சியாலும் திறமையாலும் பாலிவுட் திரையுலகில் கால்பதித்து, நன்றாக வளர்ந்துவந்தார். 

இந்நிலையில், அவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது இறப்பு தொடர்பாக முறையாக விசாரிக்க வேண்டும் என சுஷாந்த்தின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சுயசரிதை திரைப்படத்தில், தோனியாக நடித்திருந்தார் சுஷாந்த். தோனி கேரக்டரில் நடித்திருந்தார் என்பதை விட தோனியாகவே வாழ்ந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு தோனியின் உடல்மொழியை அப்படியே திரையில் பிரதிபலித்திருந்தார். சுஷாந்த்தின் இயல்பான நடிப்புக்காகவே, அந்த திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பவர்கள் பலர். 

அவரது மறைவு, தோனியை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளதாகவும், அவர் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும் தெரிகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு, ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், 22 வயதான இளம் கிரிக்கெட் வீரரான திக்விஜய் தேஷ்முக், சுஷாந்த்திற்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். 

கடந்த 2013ம் ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நடிப்பில் வெளியான Kai po che என்ற பாலிவுட் திரைப்படத்தில் திக்விஜய் தேஷ்முக்கும் நடித்திருந்தார். அப்போது திக்விஜய்க்கு வெறும் 15 வயதுதான். அந்த இளம் வயதில் சுஷாந்த்துடன் இணைந்து அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அப்போது, கேமரா கோணங்கள், எப்படி நடிக்க வேண்டும் ஆகியன குறித்து சுஷாந்த் சிங் ராஜ்புத், அவரது அறைக்கே அழைத்துச்சென்று தனக்கு கற்றுக்கொடுத்ததாக திக்விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த திரைபடத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் சுஷாந்த்திற்கு அளித்த வாக்குறுதியை இதுவரை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார் திக்விஜய். 

இதுகுறித்து பேசியுள்ள திக்விஜய் தேஷ்முக், கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுஷாந்த். அந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில், அவருக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன். நான் கிரிக்கெட்டில் குறிப்பிடும்படியான ஒரு இடத்தை பிடிக்கும் வரை உங்களை(சுஷாந்த்) சந்திக்க மாட்டேன் என்று அவருக்கு சத்தியம் செய்துகொடுத்தேன். இந்த ஆண்டு ஐபிஎல்லுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டேன். இந்த விஷயத்தை சுஷாந்த்தை நேரில் சந்தித்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள்ளாக ஊரடங்கு போடப்பட்டது. இப்போது அவரிடம் சொல்வதற்கு, அவர் உயிருடன் இல்லை. ஊரடங்கு இல்லையென்றால், அவருக்கு அளித்த சத்தியத்தை நிறைவேற்றியிருப்பேன். ஆனால் கடைசிவரை என்னால் அது முடியாமல் போயிற்று என்று திக்விஜய் தேஷ்முக் வேதனை தெரிவித்துள்ளார்.

திக்விஜய் சிங், 2019-20 ரஞ்சி தொடர் மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடினார். ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் திக்விஜய் தேஷ்முக்கை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

click me!