தோனிக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் நடக்கவுள்ளதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் நடக்கவேண்டும்.
ஐபிஎல் அணிகள் வரும் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன் அவரவர் சொந்த நாட்டில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதும், அங்கு பரிசோதனை செய்யப்படும்.
அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும், அணி நிர்வாகிகளும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றனர். சிஎஸ்கே அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, சென்னைக்கு வந்து பயிற்சி முகாமை தொடங்கவுள்ளனர்.
இந்நிலையில் இன்று சிஎஸ்கே கேப்டன் தோனியின் மாதிரிகள், கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. ராஞ்சி குருநானக் மருத்துவமனையில் இருந்து வந்து தோனியின் மாதிரிகள் எடுத்து செல்லப்பட்டன. பரிசோதனை முடிவில் தோனிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. எனவே தோனி ஐபிஎல்லில் ஆடுவது உறுதியாகியுள்ளது. தோனிக்கு கொரோனா நெகட்டிவ் என்ற தகவலை அறிந்ததும் ரசிகர்களும் உற்சாமாகிவிட்டனர்.