அஷ்வினை கழட்டிவிட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப்.. தட்டி தூக்கிய வேற அணி

By karthikeyan VFirst Published Sep 1, 2019, 1:42 PM IST
Highlights

அஷ்வினை கேப்டன்சி பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே விடுவிக்கிறது பஞ்சாப் அணி. கேஎல் ராகுலை கேப்டனாக்க அந்த அணி திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இந்த 2 அணிகளும் கோப்பைகளை அள்ளும் நிலையில், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

அந்த மூன்று அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஏமாற்றத்துடன் வெளியேறுகின்றன. முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அதிரடியான மாற்றங்களை இந்த அணிகள் மேற்கொண்டு வருகின்றன.]

ஆர்சிபி அணி கூட, தலைமை பயிற்சியாளரை மாற்றியுள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் மற்றும் பவுலிங் பயிற்சியாளராக இருந்த நெஹ்ரா ஆகிய இருவரையும் அதிரடியாக நீக்கிவிட்டது. தலைமை பயிற்சியாளராக சைமன் கேடிச்சையும் இயக்குநராக மைக் ஹெசனையும் நியமித்துள்ளது. 

அந்தவகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சில அதிரடியான மாற்றங்களை செய்கிறது. அஷ்வினை கேப்டன்சி பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே விடுவிக்கிறது பஞ்சாப் அணி. கேஎல் ராகுலை கேப்டனாக்க அந்த அணி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் அணி கழட்டிவிடும் அஷ்வினை டெல்லி கேபிடள்ஸ் அணி எடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அஷ்வினுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுவது மட்டும் தான் மிச்சம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு டெல்லி அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அடுத்த ஐபிஎல் சீசனில் அஷ்வின் டெல்லி அணியில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

இந்த 3 அணிகளில் உண்மையாகவே தீவிரமான மற்றும் உருப்படியான முயற்சிகள் மற்றும் வீரர்கள் தேர்வை மேற்கொள்வது டெல்லி கேபிடள்ஸ் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே ரிக்கி பாண்டிங் என்ற ஜாம்பவான் தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது, கடந்த சீசனில் கூடுதலாக கங்குலியை ஆலோசகராக நியமித்தது டெல்லி கேபிடள்ஸ். அதற்கு பலனும் கிடைத்தது. பாண்டிங்கும் கங்குலியும் ஒரே அணியில் இருந்தால் சொல்லவா வேண்டும்..? 7 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது. அந்தவகையில், அனுபவம் வாய்ந்த அஷ்வினின் சேர்க்கை, டெல்லி அணிக்கு வலு சேர்க்கும்.

2017 ஐபிஎல் சீசனில் அஷ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.7.8 கோடிக்கு எடுத்தது. அவரை கேப்டனாக நியமித்தது அப்போதைய அணியின் ஆலோசகர் சேவாக். அஷ்வின் நன்றாகத்தான் அணியை வழிநடத்தினார். ஆனாலும் கடந்த இரண்டு சீசன்களில் அந்த அணி பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில், அஷ்வினை கழட்டிவிட்டது பஞ்சாப் அணி. 
 

click me!