பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 107 ரன்கள் என்ற இலக்கை 16வது ஓவரிலேயே அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பஞ்சாப் கிங்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியில் மயன்க் அகர்வால்(0), கெய்ல்(10), பூரன்(0) ஆகிய மூவரையும் பவர்ப்ளேயில் தீபக் சாஹர் வீழ்த்த, ராகுலும் 5 ரன்னில் ரன் அவுட்டானார். பவர்ப்ளேயில் வெறும் 26 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்த நிலையில், 7வது ஓவரில் தீபக் ஹூடாவை 10 ரன்னில் வீழ்த்தினார் தீபக் சாஹர்.
அதன்பின்னர் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் ஜெய் ரிச்சர்ட்ஸன்(15), முருகன் அஷ்வின்(6) ஆகியோர் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி தனி ஒருவனாக பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்திய ஷாருக்கான் 47 ரன்னில் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் பஞ்சாப் அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே அடித்தது
107 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி இலக்கு எளிதானது என்பதால், அதை 16வது ஓவரிலேயே அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 46 ரன்களும் டுப்ளெசிஸ் 36 ரன்களும் அடித்தனர்.
இந்த சீசனின் முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தோல்வியை தழுவிய சிஎஸ்கே, அணி பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.