#AUSvsIND இந்திய அணியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியா..!

By karthikeyan VFirst Published Jan 10, 2021, 7:06 PM IST
Highlights

ஆஸி., ரசிகர்கள் இந்திய வீரர்களை இன ரீதியாக மட்டம்தட்டி பேசியதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டுள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில், ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் சிராஜை இன ரீதியாக, ஆஸி., ரசிகர்கள் மட்டம்தட்டி பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

சிட்னி டெஸ்ட்டில் 4 நாட்கள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், 2வது இன்னிங்ஸில், ஆஸி., அணி நிர்ணயித்த 406 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 4ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாள் மட்டும் எஞ்சியுள்ளது.

இந்த போட்டியின், 3ம் நாள் ஆட்டத்தில் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர் முகமது சிராஜையும், அதேபோல பும்ராவையும், ஆஸி., ரசிகர்கள் சிலர் மது அருந்திவிட்டு இன ரீதியாக மட்டம்தட்டி பேசினார். இதுகுறித்து உடனடியாக முகமது சிராஜ் கள நடுவரிடம் புகார் அளித்தார். பின்னர் கேப்டன் ரஹானே மற்றும் சீனியர் வீரர் அஷ்வின் ஆகியோர் களநடுவர்களிடமும், போட்டி ரெஃப்ரியிடமும் புகார் அளித்தனர். இந்த விவகாரம் குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். இதுகுறித்து ஐசிசி விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ”இந்த தொடரை நடத்துபவர்கள் என்ற முறையில், இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த எங்களது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம். இதுமாதிரியான பாகுபாடு, பாரபட்சம் மற்றும் ஏற்றத்தாழ்வு தொடர்பான செயல்பாடுகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வன்மையாக கண்டிக்கிறது. இனவெறி வசைபாடுபவர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் எந்தவிதத்திலும் வரவேற்காது” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ரசிகர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுமாதிரியான வரலாறுகள் பல உள்ளன.
 

click me!