நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விக்கெட் கீப்பர் யார்..? உறுதி செய்து அறிவித்த கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Jan 23, 2020, 12:34 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பதை கேப்டன் விராட் கோலி உறுதியாக தெரிவித்துள்ளார். 
 

ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டுமே திருப்தியளிக்காத வகையில் இருந்ததால் அவர்மீது விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் ஆடும்போது தலையில் பந்து பட்டதால், அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. 

எனவே அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல். இதையடுத்து இரண்டாவது போட்டியிலும் அவர் மிகச்சிறப்பாக கீப்பிங் செய்யவே, மூன்றாவது போட்டியில் ஆட ரிஷப் பண்ட் உடற்தகுதியுடன் இருந்தும்கூட ஓரங்கட்டப்பட்டார். பெங்களூருவில் நேற்று நடந்த கடைசி போட்டியிலும் கூட ராகுலே விக்கெட் கீப்பிங் செய்தார். 

ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் எடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில் உள்ளது இந்திய அணி நிர்வாகம். அதை உறுதி செய்யும் வகையில் பேசியிருந்தார் கேப்டன் கோலி. 

”ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்த்து பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த வழிசெய்கிறது. அவர் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். ராகுலே விக்கெட் கீப்பராக தொடர்வது சரிவருகிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதற்குள்ளாக அவசரப்பட்டு மாற்றங்களை செய்ய தேவையில்லை. இப்போது ஆடிய பிளேயிங் லெவனை மாற்ற வேண்டியதற்கு அவசியம் இல்லை” என்று கோலி தெரிவித்திருந்தார். 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று நியூசிலாந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேப்டன் கோலி. அப்போது, டி20 கிரிக்கெட்டில் ராகுல் தான் விக்கெட் கீப்பர் என்பதை உறுதி செய்தார். 

இதுகுறித்து பேசிய கேப்டன் கோலி, டி20 கிரிக்கெட்டில் மாற்றங்கள் உள்ளன. கேஎல் ராகுலே தொடக்க வீரராக இறங்குவார். விக்கெட் கீப்பிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அவர் விக்கெட் கீப்பிங் செய்வது அணியில் நிலைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதோடு அணிக்கு நல்ல பேலன்ஸும் கிடைத்தது. எனவே ராகுலே விக்கெட் கீப்பராக தொடர்வார் என்று கேப்டன் கோலி உறுதி செய்தார். 
 

click me!