அடுத்த புரட்சிக்கு தயாரான தாதா.. ஐசிசி-யையே அலறவிடும் கங்குலி

By karthikeyan VFirst Published Dec 23, 2019, 3:01 PM IST
Highlights

பிசிசிஐயின் தலைவர் கங்குலி, இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திக்காட்டி வரலாறு படைத்த நிலையில், அடுத்த புரட்சிக்கு தயாராகியுள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, அண்மையில் பிசிசிஐயின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ தலைவரானதுமே, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பேசி, இந்தியாவில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தினார். கங்குலியின் அதிரடியான நடவடிக்கையால், இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை வங்கதேசத்துக்கு எதிராக ஆடியது.

இந்நிலையில், அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் அணிகளான இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மற்றொரு டாப் அணியையும் சேர்த்துக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் தொடர் ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளார். 

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகிய நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கங்குலியின் திட்டப்படி, 2021ம் ஆண்டு முதல், இந்த நான்கு அணிகளும் மோதும் கிரிக்கெட் தொடர், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில்(தொடரில் கலந்துகொள்ளும் 4 நாடுகள்) நடைபெறும் என தெரிகிறது. 

இந்த தகவலை கங்குலியே தெரிவித்துள்ளார். ஆனால் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகம் தான். ஏனெனில், ஐசிசி, அதிகபட்சமாக 3 நாடுகள் கலந்துகொண்டு ஆடும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்குத்தான் அனுமதி வழங்கியிருக்கிறது. ஐசிசியே, அனைத்து அணிகளும் கலந்துகொள்ளும் சில பெரிய தொடர்களை நடத்துவதால், 3 அணிகளுக்கு மேல் ஆடுவதற்கு அனுமதி கொடுப்பதில்லை. எனவே அதிகபட்சமாக முத்தரப்பு தொடர் தான் நடத்த முடியும் என்கிற நிலை தான் உள்ளது. இந்நிலையில், அதை உடைத்து, நான்கு அணிகள் ஆடும் ”சூப்பர் தொடர்”-ஐ நடத்த கங்குலி அதிரடியாக திட்டமிட்டுள்ளார். அதற்கான தீவிர முயற்சிகளை இனிவரும் நாட்களில் எடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

click me!