தீவிரமடையும் கொரோனா.. ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை.. முக்கியமான முடிவு

By karthikeyan VFirst Published Mar 21, 2020, 6:49 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகிவரும் நிலையில், ஐபிஎல் குறித்து பிசிசிஐ, அணி உரிமையாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளது.
 

சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையில், இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 270க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதால், மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

கிரிக்கெட் ரசிகர்களின் 2 மாத கால திருவிழாவான ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

பிரிஜேஸ் படேல் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் கங்குலி, ஜெய் ஷா, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஐபிஎல்லை நடத்துவது குறித்து விவாதித்தனர். கூட்டத்திற்கு பின்னர், ஐபிஎல் போட்டிகளை விடவும் அதனால் கிடைக்கும் வருவாயை விடவும் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஐபிஎல் இரண்டு மாதங்கள் நடக்கக்கூடிய மிகப்பெரிய தொடர். ஏற்கனவே 15 நாட்களுக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை உருவானால், அதன்பின்னர் முழு தொடரை நடத்துவது கடினம். கொரோனா தீவிரம் குறையாவிட்டால் ஐபிஎல்லை நடத்துவதே சந்தேகம்.

ஐபிஎல் தாமதமாக தொடங்கப்பட்டால், குறைவான போட்டிகள் நடத்தப்படலாம். ஒரேயொரு நகரத்தில் மட்டும் ஐபிஎல் நடத்தப்படலாம் அல்லது வெளிநாட்டில் நடத்தப்படலாம். இல்லையென்றால் ஜூலை - செப்டம்பர் காலத்தில் நடத்த வாய்ப்புள்ளது என்று பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

ஆனால் எதுவாக இருந்தாலும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு தான் தெரியும். இதற்கிடையே, மக்களின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர. அதனுடன் ஒப்பிடுகையில் ஐபிஎல்லை நடத்துவது அவ்வளவு அவசியமான விஷயம் அல்ல. ஐபிஎல்லை விட நாட்டு மக்களின் நலனும் பாதுகாப்புமே முக்கியம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜீஜூ தெரிவித்திருந்தார். 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல்லை நடத்துவது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இப்படியொரு சூழலில் ஐபிஎல்லை நடத்த வேண்டாம் என்பதே எங்களது அறிவுரை. ஆனால் அதுகுறித்து ஐபிஎல் ஒருங்கிணைப்பாளர்களே முடிவெடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை கூடுதல் செயலாளர் தெரிவித்திருந்தார்.

கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகிவரும் நிலையில், ஐபிஎல்லை நடத்துவது குறித்து அணி உரிமையாளர்களுடன் மறுபடியும் ஆலோசனை செய்ய பிசிசிஐ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கூட்டமாக கூடுவதை தவிர்த்து, அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதால், இந்த கூட்டத்தை கான்ஃபரன்ஸ் காலில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி(செவ்வாய்க்கிழமை) பிசிசிஐ அதிகாரிகள், அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் கான்ஃபரன்ஸ் காலில் ஐபிஎல்லை நடத்துவதா இல்லையா என்பது குறித்து விவாதிக்கவுள்ளது.

click me!