டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் அபார சாதனை.. முத்தையா முரளிதரனுடன் முதலிடத்தை பகிர்ந்த அஷ்வின்

By karthikeyan VFirst Published Oct 6, 2019, 10:44 AM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய அஷ்வின், முத்தையா முரளிதரனுடன் ஒரு சாதனையை பகிர்ந்துகொண்டுள்ளார். 
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் அஷ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை ஆல் அவுட் செய்ய முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 323 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 395 ரன்கள் என்ற இலக்குடன் நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான வீரரான டீன் எல்கரை நேற்றே வீழ்த்திவிட்டார் ஜடேஜா. நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் அடித்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை மார்க்ரமும் டி ப்ருய்னும் தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அஷ்வின், அந்த ஓவரில் டி ப்ருய்னை வீழ்த்தினார். இது அஷ்வினின் 350வது டெஸ்ட் விக்கெட். 66வது போட்டியில் 350வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் அஷ்வின். இதன்மூலம் 350 டெஸ்ட் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை முத்தையா முரளிதரனுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் அஷ்வின். முத்தையா முரளிதரனும் தனது 66வது டெஸ்ட் போட்டியில் தான் 350வது விக்கெட்டை வீழ்த்தினார். 

டி ப்ருய்னின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதை அடுத்து, பவுமா, டுப்ளெசிஸ் மற்றும் டி காக் ஆகிய மூவரையும் கிளீன் போல்டு செய்து அனுப்பினார் ஷமி. 60 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து, தோல்வியை தவிர்க்க போராடிவருகிறது தென்னாப்பிரிக்க அணி. ஆனால் இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 
 

click me!