அஷ்வின் சதத்தால் ஆந்திரா அபார வெற்றி.. தமிழ்நாடு அணி படுதோல்வி

By karthikeyan VFirst Published Feb 22, 2021, 4:20 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் ஆந்திராவிற்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
 

விஜய் ஹசாரே தொடரில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான போட்டி இந்தூரில் நடந்தது. டாஸ் வென்ற ஆந்திரா அணி, தமிழ்நாட்டை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியில், ஹரி நிஷாந்த், ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித் ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக பாபா அபரஜித் 40 ரன்கள் அடித்தார். ஷாருக்கானுக்கு முன்பே களமிறக்கப்பட்ட சோனு யாதவ் 37 ரன்கள் அடித்தார். ஷாருக்கான் 19 ரன்கள் மட்டுமே அடிக்க, தமிழ்நாடு அணி, 41.3 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே அடித்தது.

177 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆந்திர அணியின் அஷ்வின் ஹெப்பார் ஒருமுனையில் நிலைத்து நின்று சதமடிக்க, மறுமுனையில் 3 விக்கெட்டுகள் விழுந்தது. ஆனாலும் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்த அஷ்வின் ஹெப்பார் 101 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று ஆந்திர அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

இதையடுத்து 30வது ஓவரிலேயே இலக்கை எட்டி ஆந்திரா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

click me!