
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒரு காலத்தில் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் தான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல, மாறாக ஒரு நடிகர் என்று வாதிட்டு, சுமார் 58 லட்சம் ரூபாய் வரியைச் சேமித்திருக்கிறார் என்ற சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
வரி ஆலோசனை நிறுவனமான Taxbuddy-யின் சுஜித் பாங்கர் வெளியிட்டுள்ள தகவல்படி, 2002-03 நிதியாண்டில் சச்சின் டெண்டுல்கர், ESPN, Pepsi, மற்றும் VISA போன்ற நிறுவனங்களின் வெளிநாட்டு விளம்பரங்கள் மூலம் சுமார் ரூ.5.92 கோடி அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டியிருந்தார்.
இந்த வருமானத்தை 'கிரிக்கெட் வருமானம்' என்று காண்பிப்பதற்குப் பதிலாக, நடிப்பில் கிடைத்த வருமானம் என்று குறிப்பிட்டார். வெளிநாட்டில் சம்பாதிக்கும் நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வரிச் சலுகையைப் வழங்கும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80RR-ன் கீழ் 30% வரி கழிவு (சுமார் ரூ.1.77 கோடி) கோரினார்.
இந்த கோரிக்கையை வருமான வரித்துறை ஏற்க மறுத்தது. "நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரர் விளம்பர வருமானம் கிரிக்கெட்டுடன் தொடர்புடையது. அதை 'பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம்' என்று கருத வேண்டும்; அதற்கு 80RR-ன் கீழ் சலுகை கிடைக்காது" என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
வருமான வரித் துறையின் எதிர்ப்புக்குப் பிறகும் ச்சின் உறுதியாகப் பதிலளித்தார். "நான் விளம்பரங்களில் மாடலிங் செய்தேன். அது ஒரு நடிகரின் தொழில்; அதற்கு 80RR பிரிவு பொருந்தும்." என்றார்.
இது தொடர்பான வழக்கு வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (ITAT) விசாரணைக்கு வந்தது. சச்சினின் கொடுத்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், "நடிப்பு என்பது பாலிவுட் சினிமாவுக்கு மட்டும் உட்பட்டது அல்ல" என்று கூறியது.
"திறமை, கற்பனை, கலைத்திறன் கொண்ட எந்தவொரு படைப்புச் செயல்பாடும் நடிப்பில் அடங்கும்" என்று தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியது. இதன் விளைவாக, நிறுவனங்களின் விளம்பரங்களில் சச்சின் தோன்றியதைக் 'நடிப்பு' என்றே தீர்ப்பாயம் அங்கீகரித்தது.
தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சச்சினுக்குக் அவர் கோரிய ரூ.1.77 கோடி கழிவு முழுமையாகக் கிடைத்தது. இந்த வரிச்சலுகை காரணமாக, அவர் சுமார் 58 லட்சம் ரூபாய் வரியைச் சேமித்தார்.