இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, கேஎல் ராகுல் தான் அணியை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி நாட்டிங்காமில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. கடந்த 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இம்முறை டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, கேஎல் ராகுலுக்கு இங்கிலாந்து கண்டிஷனில் ஆடிய அனுபவம் இருக்கிறது. இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமும் அடித்திருக்கிறார். கேஎல் ராகுல் இந்த தொடரில் மிடில் ஆர்டரில் ஆடப்போகிறார். அவர் கண்டிப்பாக அணியில் வாய்ப்பு பெறுவார். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்களுக்கான தேவை இருக்கிறது. அதனால் தான் பிரித்வி ஷாவும் சூர்யகுமார் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் பேட்டிங் தான் பலவீனமாக உள்ளது. அபிமன்யூ ஈஸ்வரன் ஃபார்மில் இல்லை. தொடக்க வீரர்களான ரோஹித்தும் மயன்க் அகர்வாலும் வெளிநாட்டு கண்டிஷனில் இதுவரை சிறப்பாக ஆடி அவர்களை நிரூபித்ததில்லை. ஹனுமா விஹாரியின் நிலைத்தன்மையில் பிரச்னை உள்ளது. எனவே கேஎல் ராகுலுக்கு கண்டிப்பாக அணியில் இடம் இருக்கிறது. ஆனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர் மிடில் ஆர்டரில் ஆடவிருப்பதாக தெரிகிறது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.