
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவிதத்திலும் சிறப்பான பங்களிப்பு செய்து, 3 விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துவைத்திருந்தவர் ஹர்திக் பாண்டியா.
2018ம் ஆண்டு ஆசிய கோப்பையில் முதுகில் அடைந்த காயத்திற்கு பிறகே அவரது ஃபிட்னெஸ் சரியாக இல்லை. அதன்பின்னர் அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டுவருகிறார் ஹர்திக் பாண்டியா. 2019 உலக கோப்பையில் ஆடிய ஹர்திக் பாண்டியா, அந்த தொடரிலும் ஒரு பேட்ஸ்மேனாகத்தான் ஆடினாரே தவிர, பவுலிங் வீசவில்லை. பவுலிங் வீசுமளவிற்கான ஃபிட்னெஸுடன் அவர் இல்லாததால் தான் பந்துவீசவில்லை. கடந்த ஐபிஎல் சீசனிலும் அவர் பந்துவீசவில்லை.
ஹர்திக் பாண்டியா பந்துவீசினால் தான் அவர் இந்திய அணியில் இருப்பது பிரயோஜனம். ஏனெனில் அவர் ஒரு ஆல்ரவுண்டராகத்தான் இந்திய அணிக்கு தேவை. டி20 உலக கோப்பைக்கு பிறகு, முழு ஃபிட்னெஸை அடைவதற்காக அவராகவே காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொண்டார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மறுவாழ்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்.
நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடாத ஹர்திக் பாண்டியா, இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் எடுக்கப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக உருவெடுத்துள்ளனர்.
அதிலும் வெங்கடேஷ் ஐயர் பட்டைய கிளப்பிவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் அதிரடியாக ஆடி சிறப்பாக போட்டியை முடித்து கொடுத்தார். டெத் ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை அசாத்தியமாக அடித்து ஃபினிஷர் ரோலுக்கு, தான் தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 19 பந்தில் 35 ரன்களை விளாசி, சூர்யகுமார் யாதவுடன் இணைந்து கடைசி 5 ஓவரில் இந்திய அணி 86 ரன்களை குவிக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார். 2வது போட்டியில்18 பந்தில் 33 ரன்கள் அடித்தார். பேட்டிங்கில் மட்டுமல்லாது பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். 3வது டி20 போட்டியில் அபாரமாக பந்துவீசி, பொல்லார்டு மற்றும் ஹோல்டர் ஆகிய வெஸ்ட் இண்டீஸின் 2 முக்கியமான, பெரிய வீரர்களை வீழ்த்தி அசத்தினார்.
அதிரடியான பேட்டிங், சிறப்பான பவுலிங் என தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் வெங்கடேஷ் ஐயர், ஹர்திக் பாண்டியாவின் இடத்தை கிட்டத்தட்ட பிடித்துவிட்டார். ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸ் எந்தளவிற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு அவர் தயார் என்றே அறிவிக்கவில்லை. அதனால் தான் அவரை இந்திய அணியில் எடுக்கவில்லை என்று தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், அதற்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பெற, இப்போதைக்கு ஹர்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயருக்கே அதிக வாய்ப்பிருப்பதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்திருந்தார்.
ஹர்திக் பாண்டியா vs வெங்கடேஷ் ஐயர் என்று விவாதம் வலுத்து கொண்டிருக்கிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருவரில் யார் ஆல்ரவுண்டராக ஆடுவார் என்பதுதான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஹர்திக் என்றுமே ஹர்திக் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் பந்துவீசுமளவிற்கு முழு ஃபிட்னெஸுடன் அணிக்கு வந்தால் அவரை ஆரத்தழுவி வரவேற்கலாம். ஒரு வீரரின் வளர்ச்சியால் மற்றொரு வீரர் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது இல்லை என்பதுதான் என் கருத்து.
வெங்கடேஷ் ஐயர் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியா ஃபிட்னெஸுடன் அணிக்கு திரும்பினால், ஏன் இருவரில் ஒருவரை புறக்கணிக்க வேண்டும்? இருவரையுமே அணியில் ஆடவைக்கலாம். ஹர்திக்கும் பந்துவீசி, வெங்கடேஷ் ஐயரும் ஒருசில ஓவர்கள் வீசினால் அது அணிக்கு பலம் தான். 6 மற்றும் 7ம் வரிசைகளில் அவர்கள் இருவரும் ஆடினால் அணியின் பேட்டிங் டெப்த்தும் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக அணியே வேற லெவல் அணியாக தெரியும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.