ஈரோடு பெரிய மாரியம்மன் ஆலய திருவிழா நிறைவு; மஞ்சள் நீராடி மகிழ்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

By Velmurugan sFirst Published Apr 6, 2024, 7:36 PM IST
Highlights

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவின் நிறைவாக கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர் .

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 23ம் தேதி இரவு 3 கோயில்களிலும் கம்பங்கள் நடப்பட்டதை அடுத்து, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து வந்தனர். 

இந்நிலையில், விழாவின் நிறைவாக கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 6ம் தேதி பகல் 3 மணிக்கு நடைபெற்றது. அப்போது பக்தர்களின் வழிபாட்டிற்காக 3 கோயில்களின் முன்பாக நடப்பட்டிருந்த 3 கம்பங்களும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு எடுக்கப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் ஒன்றாக சேர்ந்தது. இதனையடுத்து, ஈஸ்வரன் கோயில் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, மேட்டூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 

மோடி மீண்டும் பிரதமரானால் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்கள் உடைக்கப்படும்; திருமாவளவன் எச்சரிக்கை

அப்போது வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பங்கள் மீது உப்பு, மிளகு தூவி வழிபட்டனர். இந்நிகழ்ச்சியை ஒட்டி பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் ஊற்றியும், மஞ்சள் பொடிகளை தூவியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு மாநகர் முழுவதும் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. இவ்விழாவில் ஈரோடு மட்டுமன்றி அண்டை மாவட்ட பக்தர்களும் திரளாக பங்கேற்று கம்பம் வடிவில் எடுத்து வரப்பட்ட அம்மனை வழிபட்டனர்.  

நிகழ்ச்சியின் நிறைவாக, காரை வாய்க்காலில் மூன்று கம்பங்களும் விடப்பட்டன. இவ்விழாவையொட்டி, நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததோடு வாகன போக்குவரத்தும் மாற்றம் செய்யபட்டிருந்தது.

click me!