பைத்தியத்திற்கு வைத்தியம் பார்த்த காலகண்டன்

By Dinesh TGFirst Published Sep 17, 2022, 12:42 AM IST
Highlights

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் திருவிழா என்ற ஊரில் அமைந்துள்ள திருத்தலம் திருவிழா மகாதேவர் கோயில். நீலகண்டப் பெருமானான சிவபெருமான் வாழும் தலம் என்பதால், இந்த தலத்து இறைவனை, காலகண்டன் என்றும் அழைக்கின்றனர். தன்னைத் தேடிவரும் பக்தர்களின் வாழ்க்கையில் கலந்த நஞ்சை காலகண்டன் எடுப்பார் என்பது ஐதீகம்.
 

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் திருவிழா என்ற ஊரில் அமைந்துள்ள திருத்தலம் திருவிழா மகாதேவர் கோயில். நீலகண்டப் பெருமானான சிவபெருமான் வாழும் தலம் என்பதால், இந்த தலத்து இறைவனை, காலகண்டன் என்றும் அழைக்கின்றனர். தன்னைத் தேடிவரும் பக்தர்களின் வாழ்க்கையில் கலந்த நஞ்சை காலகண்டன் எடுப்பார் என்பது ஐதீகம்.

இந்த கோயிலானது எர்ணாகுளத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் எர்ணாகுளம், செர்த்தலை சாலையில், திருவிழா ரயில் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் இந்தக் கோயில் உள்ள பகுதியானது குளமாக இருந்தது. அந்தக் குளத்தில் ஆமைகள் வாழ்ந்து வந்தன. 

ஒரு சமயம் இந்த ஆமைகளை உள்ளாடர்கள் என்பவர்கள் ஈட்டிகளால் குத்தி வேட்டையாடியபோது, அந்தக் குளத்தில் குருதி பீறிட்டு நீர் செந்நிறமானது.  இதனையடுத்து மக்கள் இக்குளத்து நீரை இரைத்து வெளியேற்றி பார்த்தபோது, குளத்தின் நடுவில் சிவலிங்கம் தென்பட்டது. அந்த லிங்கத்திருமேனியில் இருந்துதான் குருதி வெளியேறுகிறது என்பதைக் கண்டனர். இதனை ஒரு முனிவர் வந்து பார்த்து, தன்னிடம் இருந்த சாம்பலால் அத்திருமேனியில் வைத்து அழுத்தி, குருதி வெளியேறுவதை நிறுத்தினார். மேலும் அக்குளத்திலேயே ஒரு கோயிலை அமைக்க மக்களை முனிவர் கேட்டுக்கொண்டார். அதன்படியே அக்குளத்தை மணலால் நிரப்பி, சிறிய கோயிலை எழுப்பி வழிபடத்துவங்கினர்.

இதன்பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஒருவர் இக்கோயிலில் தங்கி, சிவபெருமானை வழிபட்டு வந்தார். இந்நிலையில் பக்தர் ஒருவரின் கனவில் வந்த இறைவன், மனநிலை பாதிக்கப்பட்டவரை அங்கேயே தங்க வைத்து, கோயிலில் புதிதாக முளைக்கும் செடியிலிருந்து, இலைகளைப் பறித்து அதன் சாற்றில் பால் கலந்து பூசையில் வைத்து அவருக்கு தரும்படி கூறினார். அவ்வாறே செய்ய மனநிலை பாதிக்கப்பட்டவர் பூரண குணமடைந்தார் என தலவரலாறு கூறுகிறது.

கருங்கல்லில் கடவுள் சிலை .. காரணம் என்ன தெரியுமா?

நாகர்ஜுனா என்ற புத்த துறவி இத்தலத்தில் தங்கியிருந்து வழிபட்டுள்ளார். அதேபோல, வாகபட்டா என்ற ஆயுர்வேத நிபுணர் இத்தலத்தில் தங்கியிருந்து ஆயுர் வேத மருந்துகள் தொடர்பான ‘அஷ்டாங்க ஹிருதயம்’ என்ற நூலை எழுதியுள்ளார் எனத் தலவரலாறு கூறுகிறது.

விசாலமான நிலத்தில் கேரளத்தில் காணப்படும் பாரம்பரிய ஆலயங்களின் தன்மையிலேயே திருக்குளத்தோடு இந்த ஆலயம் அமைந்துள்ளது. கருவறைக்குள் பள்ளமான இடத்தில் மகாதேவர், காலகண்டர் என்று அழைக்கப்படும் சிவபெருமான், தீப ஒளியில் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறார்.

Mahalaya Amavasya : மஹாளய பட்ச வழிபாடு எந்த நாளில் என்ன பலன்?

இப்பகுதியில் கிடைக்கும் அபூர்வ மூலிகைச்சாற்றை, பசும்பாலில் கலந்து பந்தீரடி பூஜையில் இறைவனுக்கு வைத்து வழிபடுகிறார்கள். அது நோயுற்றவர்களுக்கு பிரசாதமாகத் தரப்படும். நண்பகலில் பால் பாயசத்தை இறைவனுக்குப் படைப்பார்கள். அப்போது அருகேயுள்ள கோயிலில் சிவனின் மகளாகக் கருதப்படும் கனிச்சு குளங்கரா தேவியை இங்கு அழைத்து வந்து, அவருக்கும் பால் பாயசம் படைத்து, பூஜை செய்து, அதனை நோயுற்றவர்களுக்கும் தருவார்கள்.

இறைவன் கருவறையில் குளத்தில் தோன்றியதால், மழைக்காலங்களில் கருவறை முழுவதும் நீரால் நிறைந்துவிடும். இறைவன் நீரில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் உற்சவருக்கு மட்டுமே பூஜைகள் நடைபெறும். இன்றும் பள்ளமான இடத்திலேயே இறைவன் இருப்பதைக் காணலாம்.

click me!