ஆருத்ரா தரிசனத்தின் வரலாறும் திருவாதிரை களி செய்து படைப்பதன் பின்னணி பற்றியும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஆருத்ரா தரிசனத்தின் வரலாறும் திருவாதிரை களி செய்து படைப்பதன் பின்னணி பற்றியும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
சிவ பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் சிறப்புமிக்கது. அந்த நாளில் தான் சிவபெருமான் தனது திருவிளையாடலை நிகழ்த்தினார். இதனால் இந்த மார்கழி திருவாதிரையின் போது ஆருத்ரா தரிசன உற்சவம் நடத்தப்படுகிறது. சிவ பெருமானுக்கு நடத்தப்படும் உயர்வான ஆறுவகை அபிஷேகங்களில் ஒன்று ஆருத்ரா தரிசன திருமஞ்சனம். இதனை கண்டாலே புண்ணியம் என்று சொல்வர். திருவாதிரை என்ற சொல் சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என குறிப்பிடப்படுகிறது. திருவாதிரை அன்று நடராஜருக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை ஆருத்ரா தரிசனம் என்கிறோம்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூருத்ரா தேர் திருவிழா… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்!!
ஆருத்ரா தரிசனத்தின் வரலாறு:
முனிவர்கள் சிலர் சிவ பெருமானுக்கு எதிராக வேள்வி நடத்திய போது அவர்களது இல்லங்களுக்கு யாசகம் கேட்பவர் போல சென்ற சிவ பெருமான் மீது முனிவர்கள் புலி, உடுக்கை, நாகம் போன்ற பலவற்றை யாகத்தில் உருவாக்கி, அவற்றை ஏவி விட்டனர். அவற்றை தனது அணிகலன்களாக ஆக்கிக் கொண்ட சிவ பெருமான், முனிவர்கள் ஏவி விட்ட யானையை மிதித்து பாதாளத்தில் அழுத்தி, ஒரு காலை தூக்கி, தனது விஸ்வரூப தரிசனத்தை காட்டினார். மனம் திருந்திய முனிவர்கள் ஆவணத்தை விட்டு, சிவ பெருமானிடம் சரணடைந்தனர். இந்த காட்சியை உலகத்தவர்களும் காண வேண்டும் என முனிவர்கள் சிவ பெருமானிடம் வேண்டிக் கொண்டதன் காரணமாக மார்கழி திருவாதிரை நாளில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: மார்கழிப் பௌர்ணமி! - அம்மன் வழிபாட்டால் சுபகாரியங்கள் கைகூடும் நாள்!
திருவாதிரை களி செய்து படைப்பது ஏன்?
சேந்தனார் என்ற சிவ பக்தன், தினமும் விறகு வெட்டி, விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளிக்காமல் சாப்பிடுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருந்தார். ஒரு நாள் மழை பெய்து விறகு முழுவதம் நனைந்து ஈரமானதால், அவற்றை விற்க முடியவில்லை. இதனால் வீட்டு செலவிற்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் கவலையில் இருந்த சேந்தனாரிடம் சிவனடியார் ஒருவர் வந்து பசிக்கிறது என உணவு கேட்டுள்ளார். வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத நிலையில் சேர்ந்தனாரின் மவைவி, அரிசி மாவு, வெல்லம் சேர்த்து களியும், அதோடு எஞ்சி இருந்த 7 காய்கறிகளை சேர்த்து கூட்டு ஒன்று சமைத்து சிவனடியாருக்கு படைத்தனர். மறுநாள் அந்த ஊர் கோவில் அர்ச்சகர் பூஜைக்காக கோவிலை திறந்த போது, அங்கு களி, காய்கறி கூட்டு சிதறி கிடைப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். சேந்தனாரின் பக்தியை சோதிக்க சிவ பெருமானே அடியாராக வந்ததையும் புரிந்து கொண்டார். சேந்தனாரிடம் சிவபெருமான் இந்த திருவிளையாடலை நிகழ்த்திய தினமும் இந்த மார்கழி திருவாதிரை அன்று தான். இதன் நினைவாகவே இந்த நாளில் சிவபெருமானுக்கு திருவாதிரை களி செய்து படைக்கும் வழக்கம் வந்தது.