சரணாகதியின் மகத்துவம் தெரியுமா?

By Dinesh TGFirst Published Sep 8, 2022, 4:00 PM IST
Highlights

ஒருபுறம் உலகில் உள்ள ஜீவாத்மாக்கள்; மறுபுறம் அவற்றைப் படைத்த பரமாத்மா. சரணாகதி என்றால் ஜீவாத்மாக்களுக்கு முக்தி கொடுத்து, அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை பெற்ற பரமாத்மாவைச் சரண் புக வேண்டும் என்பதுதான்.
 

சரணாகதி என்றதும் நினைவுக்கு வருவது வைணவம்தான். வைணவத்துக்கு இந்த தத்துவத்தால் மகத்துவம் என்பதைவிட, வைணவம் என்றாலே 'சரணாகதி'தான் என்றொரு முடிவுக்கு வந்துவிடலாம்.

ஒருபுறம் உலகில் உள்ள ஜீவாத்மாக்கள்; மறுபுறம் அவற்றைப் படைத்த பரமாத்மா. சரணாகதி என்றால் ஜீவாத்மாக்களுக்கு முக்தி கொடுத்து, அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை பெற்ற பரமாத்மாவைச் சரண் புக வேண்டும் என்பதுதான்.

இதனை மேலோட்டமாகப் பார்த்தால், இது ஆண்டான் - அடிமை உறவோ என்று தோன்றும். ஆனால் அப்படியல்ல. ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றின் மூலமாகவோ அல்லது அனைத்தின் மூலமும் பரமாத்மாவை அடைவது எளிதானது. கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் 'மாமேகம் சரணம் வ்ரஜு' என கூறுகிறார். நானே அனைத்தும் என உணர்வாய், உணர்ந்து சரண் அடைவாய், மற்ற அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.

ஆனால், சரணாகதியை நேரடியாக ஒருவரால் அடைய முடியாது. அதற்கு ஆசார்யன் என்ற‌ வழிகாட்டி அவசியம். அவரால் தான் பரிபூரண பிரம்மத்தை அடைய சாதனை வழிமுறைகளைச் சொல்லித் தர இயலும்.

இறவனைச் சரண்புகுவதன் நோக்கம் என்னவென்றால் ‘பிறப்பு - இற‌ப்பு’ என்ற இடையறாத சங்கிலித் தொடரிலிருந்து விடுதலை பெறுவதுதான். இதனை தான் மோட்சம் என்கிறார்கள். இதனை விரும்புகிறவர்களை முமூக்ஷி என்பார்கள். அவர் தன்னைப் போன்ற மோட்ச விரும்பிகளுடன் சேர்ந்து இறைவனுக்கு மேலுலகில் கைங்கர்யம் செய்வர்.

தோஷங்களை நிவர்த்தி செய்யும் அத்ரி மலை..


தனக்கென்று எதையும் கருதாமல் எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, பலனை எதிர்பாராமல் காரியங்களை நிறைவாகச் செய்வது தான் சரணாகதி. நல்லது, கெட்டது எதுவென்று ஆராய்ந்து தீயவற்றை விலக்கிட வேண்டும். உலகாயதமான விஷயங்களில் மனதை ஈடுபடுத்த விடாமல் ஈஸ்வர தியானத்திலேயே மூழ்கிட வேண்டும்.

சுகங்களில் நித்யம், அநித்யம் என இருப்பதை உணர்ந்து அதனை விலக்க வேண்டும். அமைதியாய் மட்டுமின்றி சுய கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்திட வேண்டும்.

முதலில் இறைவன் யார், நாம் யார், மோட்சம் என்பது என்ன, அதனை எப்படி அடைவது, அதனால் ஏற்படும் பலன்கள்.. அல்ல; மோட்சத்தை அடையவிடாமல் தடுக்கக்கூடிய காம, குரோத, லோபமான விரோதிகள் யார் என அவர்களை அடையாளம் காண வேண்டும். அதற்கு தான் ஒரு தவ சீலரான குரு தேவை. அவருடைய ஆசியினால் பிரபன்னனான ஜீவாத்மா, பிரபத்தி என்கிற நிலை அடைய முடியும்.

கணபதி ஹோமம் எதற்காக தெரியுமா?

கீதையில் கண்ணன், 'மன்னனும் நானே... மக்களும் நானே... செடி- கொடி - மரங்களும் நானே' என்று கூறியிருக்கிறார்.

அதேபோன்று திருப்பாவை பாசுரத்தில், 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம்... உமக்கே நாம் ஆட் செய்வோம்' என்று சரணாகதியைச் சுருக்கமாகத் தெரிவிக்கிறார் கோதைநாச்சியார்.

வள்ளுவப் பெருந்தகை சரணாகதி என்பது அடிபணிவது என, 'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்' என்றும், 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்' என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

விபீஷண சரணாகதிதான் சரணாகதி என்றதும் நினைவுக்கு வரும். தன்னைத் துயரத்துக்கு உள்ளாக்கிய ராவணனின் தம்பிதான் விபீஷணன் என தெரிந்தும், சரண் புகுந்தவனைக் காப்பாற்றுகிறான் ராமன். மனிதனாக அவதாரம் செய்தாலும், சரண் புகுந்தாரைக் காக்கும் இறைத்தன்மையை மறக்கவில்லை ராமன் என்பது தான் இதன் சிறப்பு!

click me!