நீ எனக்கு தம்பியா இருக்கலாம்... ஆனால் தினகரன் எனக்கு மகன்.., திவாகரனை தூக்கியெறிந்த சசிகலா!?

First Published May 12, 2018, 11:07 AM IST
Highlights
You may be my brother but Dinakaran is my son Sasikala who threw Divakaran up


"பொதுச் செயலாளர் பதவி" யைத் தூக்கி எறிந்த துரோகிகளுடன் தற்போது தாங்கள் கைகோர்த்துள்ளதைக் காலமும் தமிழகமும் ஒருபோதும் மன்னிக்காது, நீங்கள் எனக்கு தம்பியாக இருக்கலாம் ஆனால் தினகரன் எனக்கு மகன் நீ எனக்கு முக்கியமில்லை, எனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சசிகலா.

தினகரனுக்கு ஆதரவாக திவாகரன் செயல்பட்டுவந்த நிலையில், அண்மையில் இருவருக்கும் மோதல் உண்டானது. தினகரன் மீது திவாகரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் 'அம்மா அணி' என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

இருவருக்கும் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில், சசிகலா  திவாகரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நோட்டீஸில், தாங்கள் என் கட்சிக்காரரின் (சசிகலா) உடன்பிறந்த இளைய சகோதரர் ஆவீர். உங்கள் மீது அதிக பாசம் கொண்டவர் என் கட்சிக்காரர் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனாலும் தற்போது தங்களுடைய முரண்பட்ட செயல்களாலும் வெளிப்பாடுகளாலும் என் கட்சிக்காரரை கனத்த மனதுடன் இந்த சட்ட அறிவிப்பை தங்களுக்கு அனுப்பும் சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளீர்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரைப் புகழ்ந்தும் அவர்களது துரோகச் செயல்களை மறைக்கும் வண்ணமாகத் தாங்கள் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதலாகத் தொடர்ந்து பத்திரிகைகள், காணொளிகள், சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களை பேட்டிகள் கொடுத்துவருகிறீர்கள்.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட அதிமுகவின் கட்சி விதிகளைச் சட்ட விரோதமாக நீக்கியதையும், ஒன்றரைக் கோடி தொண்டர்களை முன்னிலைப்படுத்தும், "பொதுச் செயலாளர் பதவி" யைத் தூக்கி எறிந்த துரோகிகளுடன் தற்போது தாங்கள் கைகோர்த்துள்ளதைக் காலமும் தமிழகமும் ஒருபோதும் மன்னிக்காது என்று சசிகலா தெரிவிக்கின்றார்.

தினகரன் குறித்து தாங்கள் பொதுவெளியில் உண்மைக்கு மாறாகப் பேசிவரும் விஷயங்கள், தங்களின் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தங்களின் பேட்டிகள் சசிகலாவின் தலைமை மாண்புக்கும் ஆளுமைக்கும் குற்றம் கற்பிக்கத் தாங்கள் உள்நோக்கத்தோடு யாரையோ திருப்திப்படுத்த முயன்றுவருகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றன என்றும் சசிகலா தெரிவிக்கின்றார்.

இறுதியாக எனது கட்சிக்காரர் சசிகலா தங்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் தாங்கள் எந்தவொரு பெயரிலும் அரசியல் ரீதியாகச் செயல்படுவது தங்களின் சொந்த உரிமை மற்றும் அடிப்படை உரிமை சார்ந்த விஷயம். ஆனால் சசிகலாவின் பெயரையும், புகைப்படத்தையும் எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது என்பது இந்தச் சட்ட அறிவிப்பின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், "எனது அக்கா, என் உடன்பிறந்த சகோதரி" என்று உரிமை கோரி தாங்கள் சசிகலா குறித்து ஊடகங்களில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த நீண்ட நெடிய சட்ட அறிவிப்பினை என் கட்சிக்காரர் தங்களுக்கு அனுப்புவதன் நோக்கமே "தாங்கள் உண்மைக்கு மாறாகத் தவறாகத் தொடர்ந்து ஊடகங்களில் பேசிவருவதை நிறுத்த வேண்டும்" என்பதற்காகத்தான்.

இந்த சட்ட அறிவிப்பினைப் பெற்ற பிறகும் தாங்கள் ஊடகங்களில் பொய்யான விஷயங்களைப் பேசும் சூழலில், ரத்த சம்பந்த உறவு என்பதை ஒதுக்கி வைத்துவிட்டுத் தங்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு என் கட்சிக்காரர் சசிகலா தள்ளப்படுவார் என்பதை இந்த சட்ட அறிவிப்பு வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!