எடியூரப்பாவின்  பல்ஸை எகிற வைக்கும் திக்…திக்.. நிமிடங்கள்… கிடுக்கிபிடிகளைத் தாண்டி மெஜாரிட்டியை நிரூபிப்பாரா ?

First Published May 19, 2018, 9:04 AM IST
Highlights
yediyurrappa will prove his majority today tough fiht in karnataka assembly


வேகமாக நகரும் திக்..திக்… நிமிடங்கள்…. கெடுபிடி உச்சநீதிமன்றம்… கிடுக்கிப் பிடி எதிர்கட்சிகள்… 104 எப்படி 113 ஆகும்…. இப்படி பல சிக்கல்களுக்கு நடுவில் எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்வாரா ? என்பது தான் இன்றைய  பரபரப்பு…

அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் 104 எம்எல்ஏக்களை மட்டுமே  வைத்துக் கொண்டு முதலமைச்சராகிவிட்டார் எடியூரப்பா!!  மத்திய அரசின் சப்போர்ட், ஆளுநரின் ஆதரவு  என ஆட்சி அமைத்துவிட்டாலும், ஆளுநர் அமைத்துக் கொடுத்த 15 நாள் கெடுவை குறைத்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எடியூரப்பாவுஙக்கு சரியான ஆப்பு வைத்துவிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 101 சதவீதம் வெற்றி பெறுவோம் என எடி அடித்துக் கூறினாலும், அவர் விழி பிதுங்கி நிற்பது என்னவோ உண்மைதான். இன்று மாலை 4 மணிக்கு  நடைபெறும் ஃபுளோர் டெஸ்ட்டில் எடியூரப்பா, தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்காக பாஜக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளது.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில்,அதை எடியூரப்பா எப்படி எதிர்கொள்வார்?  காங்கிரஸ் , மஜத கூட்டணி அதை எப்படி முறிடிக்கும் என் பல கேள்விகள் எழுந்துள்ளன.

எடியூரப்பாவைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியும் கடுமையான உழைத்து வருகிறது 224 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் 222 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.  

இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி, ராமநகரா, சென்னபட்னா என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு இடங்களிலும் வென்றார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் ஒரு ஓட்டுதான் போடமுடியும். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது 221 பேர்தான் அவையில் இருப்பார்கள். இதில்  111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவைக் காட்டினால், எடியூரப்பா தனக்கு பெரும்பான்மை இருப்பதாக நிரூபித்துவிட முடியும். 

ஆனால் பி.ஜே.பி-க்கு தற்போது இருப்பது 104 எம்.எல்.ஏ-க்கள் தான். அதே நேரத்தில் 2  சுயேச்சைகள்  எம்எல்ஏக்களையும், , பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ஒருவரையும் எப்படியாவது இழுத்துக் கொள்ள முடியும் என பாஜக கணக்குப் போடுகிறது.

ஆனால் இந்த மூவரையும் இப்போது காங்கிரஸ் தனது முகாமில் வைத்திருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேரை இதுவரை பி.ஜே.பி கடத்தி வைத்திருப்பதாக  கூறப்படுகிறது. . விஜயநகரம் எம்.எல்.ஏ ஆனந்த சிங், மாஸ்கி தொகுதி எம்.எல்.ஏ பிரதாப்கவுடா பாட்டீல் ஆகியோரை பி.ஜே.பி தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறது. எனவே, இப்போதைய கணக்குப்படி பி.ஜே.பி-யிடம் 106 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் - ம.ஜ.த  கட்சிகளின் பலம் 115 .

இவர்களில் சுயேச்சைகள் இருவர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் என மூவரும் அணி மாறினாலும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை இழக்க மாட்டார்கள். ஆகவே, அவர்களை எப்படியும் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என நினைக்கிறது பி.ஜே.பி. அப்படி வந்தால், பி.ஜே.பி-யிடம் 109 பேரும், காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி வசம் 112 பேரும் இருப்பார்கள். 

அப்படி எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தால், காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியில் நான்கு எம்.எல்.ஏ-க்களை மட்டும் அவைக்கு வரவிடாமல் செய்துவிட்டால், எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்துவிட முடியும்.

இதற்குத்தான் பி.ஜே.பி சில ரகசியத் திட்டங்களை வைத்திருந்தது. ஆனால், மே 16-ம் தேதி நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணையில் அது வெளிப்பட்டுவிட்டது. ‘

எடியூரப்பாவுக்கு கர்நாடக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கத் தடை விதிக்க வேண்டும்’ என காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி சார்பில் போடப்பட்ட அவசர வழக்கை அந்த நள்ளிரவில் உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘எம்.எல்.ஏ-க்கள் பதவிப்பிரமாணம் எடுத்தபிறகுதான், கட்சித் தாவல் தடை சட்டத்தின் வரம்புக்குள் வருவார்கள். அதற்குமுன் அவர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் தெளிவாக ஏதும் சொல்லப்படவில்லை’’ என்றார்.

‘சில எம்.எல்.ஏ-க்களை முதல்நாளில் அவைக்கு வந்து பதவியேற்க விடாமல் செய்துவிட்டு, அப்படிப்பட்ட சூழலில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கப் பார்க்கிறார்’ என்பதை இதன்மூலம் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி வழக்கறிஞர்கள் புரிந்துகொண்டனர். ‘‘

ஒருவர் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிமிடத்திலிருந்தே கட்சித்தாவல் தடை சட்டத்தின் வரம்புக்குள் வந்துவிடுகிறார்’’ என காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி வாதாடினார். நீதிபதிகளும் அப்போது, ‘‘பதவிப்பிரமாணம் எடுப்பதற்கு முன்பு கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கமுடியாது என்பது அபத்தமான வாதம். இது குதிரைப்பேரத்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுவது மாதிரி ஆகிவிடும்’’ என்று கடுமையாகக் குறிப்பிட்டனர்.

இதனால்தான், மே 18-ம் தேதி தீர்ப்பு தரும்போது, ‘‘அனைத்து எம்.எல்.ஏ-க்களும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால், எடியூரப்பாவுக்கான வழிகள் அடைபட்டுவிட்டன.

இதே போல் சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்திய சமூகத்திலிருந்து ஒருவரை நியமன எம்.எல்.ஏ-வாக நியமிக்கும் வழக்கம் உண்டு. முதல்வரின் பரிந்துரைப்படி கவர்னர் இந்த முடிவை எடுப்பார். எடியூரப்பா அவசரமாக வினிஷா நீரோ என்பவரை நியமிக்க முடிவெடுத்தார். இந்த நியமனம் உடனே நிகழ்ந்தால், அவரின் வாக்கையும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது திட்டம். ஆனால், இதை எதிர்த்தும் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டது.

அனைத்திந்திய ஆங்கிலோ இந்தியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் க்ளைவ் மைக்கேல் வான் என்பவரும், ‘இந்த எண் விளையாட்டில் எங்கள் சமூகத்தின் நியமன எம்.எல்.ஏ-வைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது’ என வழக்கு போட்டார். அதனால் இந்த வழியும் அடைபட்டு விட்டது. 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், பி.ஜே.பி-யினர் வசம் இருக்கும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் சனிக்கிழமை சட்டமன்றத்துக்கு வந்து பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாக்களித்தால், அவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும். 

இத்தனை தடைகளையும் தாண்டி எடியூரப்பா இன்று அறுதிப் பெரும்பான்மையை நிருபிப்பாரா? அல்லது என்ன நடக்கும் என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

click me!