முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

First Published May 19, 2018, 4:12 PM IST
Highlights
yeddyurappa resigns ahead of floor test


நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கினார் ஆளுநர் வஜூபாய்.

இதை எதிர்த்து காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இன்று காலை அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தற்காலிக சபாநாயகர் போபையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பெரும்பான்மையை கண்டிப்பாக நிரூபிப்பேன் என எடியூரப்பாவும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என குமாரசாமியும் உறுதியாக தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என கடைசி நேரத்தில் தெரியவந்தால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என தகவல் வெளியானது. 

அதேபோலவே, உணவு இடைவேளைக்கு பின் சட்டசபை தொடங்கியதும், எடியூரப்பா உரையாற்றினார். உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றிய எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.


 

click me!