பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், சென்னை மாநகரை தூய்மையாக்கவும், அழகாக்கவும் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சென்னை மாநகரில் உள்ள சுவரொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருவதோடு, பூங்காக்கள், ஏரிகள் புணரமைக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், காற்று மாசு, ஒலி மாசு குறைவதோடு, இரண்டரை மடங்கு, கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சுற்றுவட்டார பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இன்று பிற்பகல் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்று வரை 79,477 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குறிப்பாக, வடசென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 18862 சுவரொட்டிகளும், மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 22356 சுவரொட்டிகளும், தென் சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 38259 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் இன்று ஒரே நாளில் வடசென்னை பகுதியில் 658 சுவரொட்டிகளும், மத்திய சென்னையில் 798 சுவரொட்டிகளும், தென் சென்னையில் 491 சுவரொட்டிகள் என மொத்தம் 1937 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.