
பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நடிகர்கள் என்று பட்டிதார் சமூக தலைவர் ஹர்திக் படேல் கூறியிருப்பது குஜராத் மாநில தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆட்சி மாற்றம்?
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, முதல்கட்டமாக 70 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. கடந்த 22 ஆண்டுகளாக பாஜக மட்டுமே ஆட்சியில் நீடித்து வருவதால் ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ராகுலின் வியூகம்
தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி வியூகம் வகித்து வருகிறது. இதற்காக பட்டிதார் சமூக தலைவர் ஹர்திக் படேல், தலித் சமூகத்தின் ஜிக்னேஷ் மேவானி, மற்றும் பிற்படுத்தப்பட்ட தலைவர்களிடையே ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்கள் ஆதரவு கிடைத்தால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பட்டிதார் சமூகத்தின் ஆதரவை பெறுவதற்கு காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் பட்டிதார் சமூக தலைவர் ஹர்திக் படேல் நேற்று முன் தினம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
கேள்வி கேளுங்கள்
பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தலைவர்களாக பார்ப்பதை பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே. பொதுமக்கள் அவர்களின் பேச்சை ஆதரிக்க கூடாது.
எங்களின் நலனுக்காக என்ன செய்தீர்கள் என்று அவர்களிடம் கேள்விகளை கேட்க வேண்டும். இதற்கு பதில் சொல்ல அவர்களுக்கு பொறுப்பு உள்ளது. நமது உரிமைகளுக்காக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார். மோடியும், ராகுலும் நடிகர்கள் என்று ஹர்திக் கூறியபோது அவரது ஆதரவாளர்கள் பலத்த கரவொலி எழுப்பினார்கள்.
நம்பிக்கையில் காங்கிரஸ்
பட்டிதார் சமூகத்தவர் குஜராத்தின் மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதமாக உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் தங்களுக்கு 27 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ராகுல் காந்தியை சந்தித்தபோது, ஹர்திக் படேல் தங்கள் தரப்பு கோரிக்கைகளை ராகுல் காந்தியிடம் கூறினார். ஆனால் இதுபற்றி ராகுல் தரப்பிடமிருந்து நம்பிக்கை ஏற்படுத்தும்படியான பதில்கள் கிடைக்கவில்லை.
பட்டிதார் எனப்படும் படேல்கள் பாரம்பரியமாக பாஜகவை ஆதரித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் உரிமைக்காக கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசு ஏதும் செய்யாததால் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அவர்களது வாக்கு தங்களுக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது.