
கோவை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அன்னூரில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘'மத்திய அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு சென்னை மண்டலத்துக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்தும், கோவை மாவட்டத்துக்குப் பாகுபாட்டுடன் குறைவாக ஒதுக்கியதற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். மத்திய அரசு தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கவுரவத்தைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி நிர்வாக ரீதியாக தமிழகத்தை மாநிச் சீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தைப் புதிய மாநிலமாக (கொங்கு நாடு) உருவாக்க வேண்டும்.
தேசிய பக்திமிக்க உணர்ச்சி முழக்கமான, ஜெய்ஹிந்த்தை திருச்செங்கோடு திமுக எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவமதித்ததற்கும், அதற்கு உடந்தையாக இருந்த தமிழக அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொங்கு நாடு விவகாரத்தை பாஜகவினர் சமூக ஊடகங்களில் முன்னெடுத்து வரும் நிலையில், கோவை மாவட்ட பாஜக சார்பில் கொங்கு நாடு தனி மாநிலம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.