புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு விளக்கம்..!

By vinoth kumarFirst Published Dec 27, 2022, 2:31 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு உள்ளாகும் பொழுது எந்தெந்த மருந்துகள் கையிருப்பில் தேவைப்படுமோ அந்த மருந்துகள் தற்பொழுது இருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை ஒட்டி தமிழகத்தில் இருக்கிற அனைத்து அரசு மருத்துவ கட்டமைப்புகளுக்கும் துறையின் செயலாளர் மூலம் அறிவுறுத்தல் விடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி 24 மணி நேரத்திற்குள் துறையின் தலைமைக்கு அறிவிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள்  இல்லை. இருப்பினும் பொதுமக்களுக்கு சுயக்கட்டுப்பாடு   என்பது அவசியம் இருக்க வேண்டும். விழாக்களில் கலந்து கொள்வது என்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும். மனது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு முக கவசம் அணிய வேண்டும் சானிடைஸ் செய்து கொள்ள வேண்டும். தனிமனித இடைவேளையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

அவசர கால ஒத்திகைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசரகால ஒத்திகை இன்று  நடத்தப்படுகிறது.  கொரோனா பாதிப்பு உள்ளாகும் பொழுது எந்தெந்த மருந்துகள் கையிருப்பில் தேவைப்படுமோ அந்த மருந்துகள் தற்பொழுது இருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை ஒட்டி தமிழகத்தில் இருக்கிற அனைத்து அரசு மருத்துவ கட்டமைப்புகளுக்கும் துறையின் செயலாளர் மூலம் அறிவுறுத்தல் விடப்படுகிறது.

மாவட்ட அரசு மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டால் எதிர்கொள்வது தொடர்பான வழிமுறைகளை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்,  மருத்துவர்கள் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை  உறுதிப்படுத்தி 24 மணி நேரத்திற்குள் துறையின் தலைமைக்கு அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று மாவட்ட எல்லைகளுக்குள் இருக்கிற தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்டிருக்கிற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான மருத்துவ கட்டமைப்பு குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில் ,நேற்று சென்னையில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பும், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஒன்பது பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ((mass fever clinic)) திட்டத்தின் மூலம் உடல் வெப்பநிலை அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது, அதேபோல இரண்டு சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களுக்கு 100% பேருக்கு கொரொனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதன்படி வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கடந்த 4 நாட்களில் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆர்.டி.பி.சியார் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இது வரையும் யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் 1954 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜன் கையிருப்பு உறுதிப்பட்டுள்ளது. ஆறு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

click me!