கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் தண்டனை குறித்த விவரம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் தண்டைனை அறிவிக்கப்பட உள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் பலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பளித்தார்.
அவருக்கான தண்டனை விவரம் கடந்த 3-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அன்று வழங்கப்படவில்லை. பின்னர் நேற்று முன்தினம் வழங்கப்படும் என நீதிபதி அறிவித்ருந்தார்.
இதையடுத்து லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள், நீதிபதிக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்ததன் காரணமாக நேற்று முன்தினமும் தண்டனை விவர அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்த 11 பேரின் தண்டனைக்கான வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேரின் தண்டனை விவரம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என நீதிபதி சிவபால் சிங் கூறினார்.