இப்படியே தொடர்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்..? பொது மக்கள் ஏக்கம்..!

By Thiraviaraj RMFirst Published May 12, 2021, 11:02 AM IST
Highlights

எதிர்பார்த்ததைவிட அதிரடி காட்டி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசியல் முதிர்ச்சியுடன் அவர் ஆட்சியை தொடங்கி இருக்கிறார் என பொதுமக்கள் பேசி வருகின்றனர்.
 

எதிர்பார்த்ததைவிட அதிரடி காட்டி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசியல் முதிர்ச்சியுடன் அவர் ஆட்சியை தொடங்கி இருக்கிறார் என பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த ஒரு நிலையிலும் அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனமாக செயல்படுகிறார் என எங்கும் பேச்சாக இருக்கிறது. சென்னை, மதுரவாயலில், 'அம்மா' உணவகம், தி.மு.க.,வினரால் சேதப்படுத்தப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில், அது சரி செய்யப்பட்டது மட்டுமில்லாமல், கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அவர் முதல்வராக பதவியேற்பதற்கு முன், தமிழகத்தின் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்த பின்தான், அக்கட்சியினர், அமைச்சர் பதவி ஏற்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில், காலில் விழும் கொடுமை நடக்காதது, மக்களை வியப்படைய செய்தது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற காலதாமதம் செய்யாமல், ஐந்து திட்டங்களுக்கு, முதல்வர் கையெழுத்திட்டு இருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசின் முக்கிய பொறுப்புகளுக்கு, திறமையான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து இருப்பதும் பாராட்டுகளை பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் நிற்கும் மிகப்பெரிய பொறுப்பு, கொரோனா பரவலை தடுப்பது. அதற்கு அவர் கடுமை காட்ட வேண்டும்.

கட்சி விழாவின் போது, ஒரு தொகுதிக்கு 1,000 மரக்கன்றுகளை நட உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுதும் இரண்டு லட்சத்திற்கும் மேல் மரக்கன்று நட்டால், ஐந்து ஆண்டுகளில் அவை வளர்ந்து, கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் பெற்று தரும். ஸ்டாலின், முதல்வர் பயணத்தை சிறப்பாகவே ஆரம்பித்து இருக்கிறார்’’ என்கிற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

click me!