
தன்னை எதிர்க்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அந்த அளவிற்கு சசிகலாவை எதிர்க்காதது ஏன் என்பது தொடர்பாக தினகரன் விளக்கமளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்களும் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. அதிமுகவில் மட்டுமல்லாமல், தமிழக அரசியலிலேயே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். பின்னர், முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சசிகலா முதல்வராவதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்த வேலையில், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கட்சியிலிருந்து விலகி பன்னீர்செல்வம் தனித்து செயல்பட தொடங்கினார். அவருக்கு ஆதரவாக கட்சியின் நிர்வாகிகள் சிலரும் சில எம்.எல்.ஏக்களும் சென்றதால், பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி செயல்பட்டது.
சசிகலாவும் தினகரனும் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டதன்பிறகும் கூட, தினகரனை சாடும் அளவிற்கு பழனிசாமியோ மற்ற அமைச்சர்களோ சசிகலாவை விமர்சிப்பதில்லை.
இதுதொடர்பாக தினகரன் விளக்கமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தினகரனிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தினகரன், சசிகலா சிறையில் இருப்பதால், அவருக்கு எதிராக ஆட்சியாளர்கள் கருத்து தெரிவிப்பதில்லை. அவர் வெளியே இருந்திருந்தால், அவரையும் விமர்சித்திருப்பார்கள் என தெரிவித்தார்.