விவாகரத்து என்பது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவம், இதை பொதுவெளியில் பகிரும்போதுதான் மிக மோசமான கமெண்ட்டுகள் வருகிறது என்பதை தயவு செய்து சினிமாக்காரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
நடிகை தனுஷும் ஐஸ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யப் போகிறோம் என்பதை ஏன் மக்களிடத்தில் சொல்லவேண்டும், அப்படி தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பகிரும் போது தான் மோசமான விமர்சனங்களை (கமெண்ட்களை) அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். தொழில் வாழ்க்கை வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை சினிமாக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும், அப்படி நடந்து கொண்டாலே மோசமான விமர்சனங்களில் இருந்து தப்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார். அதாவது தனுஷ் ,ஐஸ்வர்யா விவாகரத்து செய்ய போவதாக பொது வெளியில் அறிவித்த நிலையில் பலரும் அவர்களை கேலி கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் விமர்சித்து வரும் நிலையில் பிஸ்மி இவ்வாறு கூறியுள்ளார்.
தனுஷ் மற்றும் அவரது மனைவியும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் பிரிந்து வாழ போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த ரஜினியின் குடும்பமும் இடிந்து போய் உள்ளது. ஆனால் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இதைப் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இருவரும் பிரிவதற்கான உண்மை காரணங்கள் குறித்து தாவல் இல்லாத நிலையிலும்கூட பல்வேறு யூகச்செய்திகள் உலா வருகிறது. அந்த செய்திகள் பெரும்பாலும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் இருந்து வருகின்றன. நடிகர் தனுஷ் திருமணமான பிறகும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார் அதுதான் விவாகரத்துக்கு காரணம் என்பதுபோல அந்த செய்திகள் உள்ளன. அதேபோல் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற மேட்டிமை மனப்பாங்குடன் நடந்து கொண்டார் என்றும், அவர் கணவனுக்கும் கணவரின் குடும்பத்தாருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காததே பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
பலரும் இந்த அறிவிப்பை இழிவுபடுத்தும் வகையில் மோசமான வார்த்தைகளை குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் அதுபோன்று செய்பவர்கள் எவராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டுமென மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான பிஸ்மி கூறியுள்ளார். இதேநேரத்தில் சினிமாக்காரர்கள் தேவையில்லாமல் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைகளை பொதுவெளியில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விவரம் பின்வருமாறு:- ஊடகங்கள் திரைப்படங்களைப் பற்றி தான் பேச வேண்டுமே தவிர, திரைக் கலைஞர்களை பற்றி பேசக்கூடாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காலம்காலமாக ஊடகங்கள் சினிமாவை பற்றி பேசாமல் சினிமாக்காரர்களை பற்றி பேசி வாசகர்களை டியூன் செய்து வைத்திருக்கிறது.
அந்த வகையில் சமூக ஊடகங்கள் எழுச்சி பெற்று அது இப்போது மக்களின் கைகளில் இருக்கிறது. இந்நிலையில் திரைப்பிரபலங்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு அந்த ஊடகங்கள் உள்ளன. இந்நிலையில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் பேரார்வம் காட்டும் மனநிலைக்கு மக்களை மாறியுள்ளது. இதற்கும் திரைக்கலைஞர்கள் தான் காரணம், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்களில் தங்களது அன்றாட வாழ்க்கைகளை புகைப்படங்களாக, தகவல்களாக அவர்கள் பதிவு செய்து மக்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். இன்று நான் ஒரு படத்தில் நடிக்கிறேன், ஒரு பெண்ணை காதலிக்கிறேன், திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றெல்லாம் அதில் பகிர்ந்து வருகின்றனர். தனிப்பட்ட தகவல்களை தொடர்ந்து சமூகவலைதளத்தில் வழங்கும்போது ரசிகர்களும் அதற்கு ஏற்ப டியூன் ஆகியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது இந்த திரைப்பிரபலங்கள் விவாகரத்து போன்ற செய்திகளை பகிரும்போது கூட அதே ஆர்வத்துடன் அதற்கான காரணம் என்ன என தோண்டும் செயல்களில் ரசிகர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கு முழுமுதல் காரண கர்த்தர்களே சினிமா நட்சத்திரங்கள்தான், சந்தோஷமான தகவல்களைப் பகிரும் போது அதற்கு பின்னூட்டமாக வருகின்ற கருத்துக்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் ஆனால் விவாகரத்து போன்ற துயரமான தகவல்களின் போது பின்னூட்டத்தில் வருகின்ற கருத்துக்கள் அந்த விவாகரத்தை காட்டிலும் வலி மிகுந்ததாகவும் இருக்ககூடும். எனவே அதுபோன்ற மோசமாக கமெண்ட்களை தெரிவிப்பதை ஏற்க முடியாது, சமந்தா விவகாரமாக இருந்தாலும் சரி. தனுஷ் விவகாரமாக இருந்தாலும் சரி, இமாம் விவகாரமாக இருந்தாலும் சரி, மணமுறிவு என்ற ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு அவர்கள் எந்த மாதிரியான வலி மிகுந்த சூழ்நிலையில் இருந்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், இனி எந்த காலத்திலும் இணைந்து பயணிக்க முடியாது என்ற கடினமான சூழ்நிலையில்தான் விவாகரத்து என்ற நிலைமைக்கு அவர்கள் வருகிறார்கள். எனவே இது போன்ற விஷயங்களை குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். பார்க்க வேண்டாம், கையில் ஒரு போன் இருக்கிறது, சமூக ஊடகம் இருக்கிறது என்பதற்காக என்ன கருத்துக்களை வேண்டுமானாலும் பதிவிட கூடாது.
இதற்கு நடிகர் நடிகைகளும் கூட ஒரு காரணமாக இருக்கிறார்கள், ஐஸ்வர்யா தனுஷ் அவர்கள் 18 ஆண்டுகள் வாழ்ந்தார்கள், இன்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு இன்று பிரிகிறார்கள் என்ற விஷயத்தை எதற்காக இவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும்? அதுதான் நான் கேட்கிற கேள்வி, தொழில் வாழ்க்கை வேறு, குடும்ப வாழ்க்கை வேறு, விவாகரத்து என்பது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவம், இதை பொதுவெளியில் பகிரும்போதுதான் மிக மோசமான கமெண்ட்டுகள் வருகிறது என்பதை தயவு செய்து சினிமாக்காரர்களும் புரிந்து கொள்ள வேண்டும். தொழில் வாழ்க்கையை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம், தனிப்பட்ட வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது உங்களை காயப்படுத்தையே அதிகம் கொடுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சினிமா நடிகர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் மனம், இதயம் இருக்கிறது. அவர்களை காயப்படுத்த கூடாது என்பதை அனைவரும் உணர வேண்டும். உதாரணத்திற்கு தனுஷ் அவர்கள் தனது கடிதத்தில் Spread Love என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார், அதற்கு ஒருவர் நீங்கள் love ஐ spread செய்ததால்தான் பிரச்சனை என்று பதிவிடுகிறார்.
அதேபோல் நான் வாழ்க்கையில் பிரிந்து விட்டேன் என தனுஷ் பதிவிடுகிறார் அதற்கு ஒருவர் எல்லோரையும் பிரித்துவிட்டு தானே பழக்கம் நீயே பிரிஞ்சிட்டியா என்று ஒருவர் கமெண்ட் அடிக்கிறார். இதுதான் சமூக ஊடகம், எனவே தனிப்பட்ட வாழ்க்கையை சமூக ஊடகத்தில் நேரடியாக பகிரும் போது இதுபோல மோசமான கமெண்ட்டுகள் வரும் அது வலி மிகுந்ததாக இருக்கும், எனவே சினிமாக்காரர்கள் இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.