
ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்ததால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. ஆனால் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அரசு எதிர்ப்பையும் மீறி சிலை வைப்போம் என பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் இந்து சமய அறநிலையத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா 3ம் அலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் அதிகளவு கூடும் வகையில் விழாக்களை நடத்தத் தடை விதிக்க வலியுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு நடத்தப் பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.