யார் ஜெயித்தாலும் தோள் கொடுங்கள்...கோவை தெற்கில் சக வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் எழுதிய மடல்..!

By Asianet TamilFirst Published Apr 3, 2021, 9:26 PM IST
Highlights
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் மயூரா ஜெயக்குமார், அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இத்தொகுதியின் சக வேட்பாளர்களுக்கு மடல் வரைந்துள்ளார்.

அதில், “கோவை தெற்கு தொகுதியின் சக வேட்பாளர்களே... மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கோவை தெற்குத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கமல்ஹாசனின் அன்பான வணக்கம். தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. அது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக்கொள்ளக் கூடாது என நான் என் சகாக்களிடம் அடிக்கடி குறிப்பிடுவேன்.
கோயம்புத்தூர் தெற்குத்தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழவேண்டுமென விரும்புகிறேன். யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும் கோவை தெற்கு தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள். எல்லோரும் மக்கள் பணி செய்யவே வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயக பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும். ஒரு புதிய அரசியல் கலாச்சாத்தை நோக்கிய முன்னகர்வில் கோவை தெற்கு இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டுமென விரும்புகிறேன்.  உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மிக்க அன்புடன் கமல்ஹாசன்.” என்று அந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!