
திமுக ஆட்சிக்கு வந்து 50 நாட்களில் சிறப்பாக செயல்படுவதாக மெச்சிக் கொண்டாலும், வாரிசு அதிகாரம் கொடி கட்டி பறப்பதை இப்போதும் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில், திமுக சார்பில் மேயர் பதவிக்கு யார் போட்டியிடப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியடிக்கிறது.
பால்வளத்துறை அமைச்சரான ஆவடி நாசரின் வாரிசும் மேயர் வேட்பாளருக்காக காய் நகர்த்தி வருகிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே சென்னை மாநகராட்சி மேயராக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரான சிற்றரசு துடித்து கொண்டு இருக்கிறார். இவர் இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு நெருக்கமானவர். சீட் கிடைக்காத விரக்தியில் உள்ள விருகம்பாக்கம் தனசேகரனும் மேயராக பேராவலில் உள்ளார். மறைந்த திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனின் மகனும் முட்டி மோதி வருகிறார். இந்நிலையில் தனது மகனையும் கோதாவில் குதிக்கவிடத் தயாராகி வருகிறார் ஆவடி நாசர் என்கிறார்கள்.