லாட்டரியை கொண்டுவந்தால் நடப்பதே வேறு. முதல்வர் ஸ்டாலினை பகிரங்கமாக எச்சரித்த எடப்பாடி பழனிச்சாமி.

Published : Jul 24, 2021, 01:39 PM IST
லாட்டரியை கொண்டுவந்தால் நடப்பதே வேறு. முதல்வர் ஸ்டாலினை பகிரங்கமாக எச்சரித்த எடப்பாடி பழனிச்சாமி.

சுருக்கம்

மக்களின் தலையில் மண்ணை வாரி போட்ட சந்தர்ப்பவாதத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள திமுகவின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன் அரசுக்கு வருவாயை பெருக்கும் வழி எங்களுக்கு தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியை கொண்டு வந்து ஏழை எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு:- 

ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் திரு. கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்து, லாட்டரி சீட்டு திட்டத்தையும் சீரழித்தார். அப்போதுதான் வெளிமாநில லாட்டரிகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டது. ஒரு சீட்டின் விலை பத்து ரூபாய் என்றும், பரிசு ஒரு கோடி ரூபாய் என்றும் மக்களிடையே பேராசை தூண்டப்பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம், மாதம் ஒரு முறை குலுக்கல் என்ற நிலைமாறி ஒரு நம்பர் லாட்டரி முதல் பல கோடி ரூபாய் வரை பரிசு என்று, ஒரு நாளைக்கு குறைந்தது 50  சதவீதமான லாட்டரிகள் விற்பனை தமிழகத்தில் நடைபெற்றது. இதன் காரணமாக குதிரை ரேஸ், சீட்டாட்டம் போல், லாட்டரி சீட்டு தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியது. ஏஜென்டுகள், வெளிமாநில லாட்டரி  சீட்டுகளை கள்ள நோட்டு அச்சடிப்பது போல அச்சடித்து மக்களிடம் விற்றார்கள். 

 உடனடியாக கோடீஸ்வரர்கள் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய அப்பாவி  ஏழை எளிய மக்கள், லாட்டரி மையத்தில் தங்கள் குடும்பத்தையும், வாழ்வையும் இழந்தார்கள். இந்த தீமை சமுதாயத்தில் புரையோடிப் போய் பல ஆண்டுகள் நம் மக்களை சீரழித்து பல்வேறு காலகட்டங்களில் தனியார் லாட்டரியில் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நிகழ்ந்தது. புரட்சித் தலைவருக்கு பின் நம் இயக்கத்தையும், தமிழகத்தையும் காத்த இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இரண்டாவது முறையாக 2001 இல் ஆட்சி அமைத்த பின், லாட்டரி கொள்ளையர்கள் பிடியில் இருந்து மக்களை காக்க முடிவு செய்தார்கள். அதன்படி 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு கொள்கை முடிவு எடுத்து. ஒரே கையெழுத்தில், ஒரே இரவில், லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை அம்மா அவர்களையே சாரும்.

இந்த சட்டத்திற்கு எதிராக லாட்டரி கொள்ளையர்கள் உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து தோல்வியை சந்தித்தார்கள். அம்மாவின் ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பல ஆண்டுகளாக லாட்டரி அரக்கர்களின் பிடியிலிருந்து தப்பி நல்வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், மக்களின் தலையில் மண்ணை வாரி போட்ட சந்தர்ப்பவாதத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள திமுகவின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன் அரசுக்கு வருவாயை பெருக்கும் வழி எங்களுக்கு தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனியார் லாட்டரி ஏஜென்டுகள் கொள்ளையடிக்கவும், அதன்மூலம் ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்குமான இந்த அதிகாரப்பூர்வ லாட்டரி சீட்டு திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்.

அரசின் வருவாயை பெருக்க வேறு பல நல்ல வழிகளை தேட வேண்டும். தமிழகத்தில் ஏழை எளிய மக்களை காப்பாற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும், எனவே லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என்று கழகத்தின் சார்பில் எச்சரிக்கிறேன். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!