உண்மையில் சூப்பர் நிர்வாகம் வணிக வரித்துறை தான்..! கலக்கும் மதுரை மூர்த்தி..!

By vinoth kumarFirst Published Jul 24, 2021, 12:54 PM IST
Highlights

மாவட்டந்தோறும் திடீர் ஆய்வுகளை நடத்தி, 11 மணி ஆனாலும் அலுவலகம் பக்கமே தலை காட்டாத பத்திரப்பதிவுத்துறை ஊழியர்களை 10 மணி அடித்தாலே அலுவலகத்திற்கு போய்விட வேண்டும் என எண்ணும் அளவிற்கு அதிரடி காட்டியுள்ளார். 

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக மூர்த்தி பொறுப்பேற்றதில் இருந்து சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றத்தில் இருந்து தனது அதிரடி நடவடிக்கை மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மறுபுறம் அமைச்சர்களும் அவரவர் துறைகளில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறனர். குறிப்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக மூர்த்தி பொறுப்பேற்றதில் இருந்து சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்.

இதில், பதிவுத் துறையில் ஊழல், தவறுகள் குறித்து மக்கள் தாரளமாக புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள், யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, சார்பதிவாளர் அலுவலங்களில் அனைத்து பணிகளும் கணினி மயம், அரசுக்கு செலுத்தப்படும் கட்டணங்கள் யாவையும் இணைய வழியாகவே செலுத்துதல், பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவுப் பணியினை மேற்கொள்ளுதல், சொத்துக்காக பதியும் ஆவணங்களை நேரடியாகவே ஆன்லைனில் செலுத்தும் முறைகளை கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  அப்போது, மு.க.ஸ்டாலின் கூறுகையில்;- வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரி இழப்பீட்டுத் தொகையினை மத்திய அரசிடமிருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

மேலும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை குறித்த புகார்களைத் தெரிவிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை வாயிலாகப் பெறப்படும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் எவ்விதத் தொய்வுமின்றித் தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்த வரி வருவாயானது அத்தியாவசியமனது என்பதால், வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய வரியினை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

வணிகர் நல வாரியம் சீரிய முறையில் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் உறுப்பினராகி அதன் சேவைகளைப் பெறுவதற்குத் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பதிவுத்துறையில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ள ஆவண தொகுதிகளைக் கணினியில் பதிவுசெய்தல் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். இதன் மூலம், இப்பணிகள் முடிவடைந்த பின்பு பொதுமக்கள் இணைய வழியாக ஆவணங்களின் சான்றிட்ட நகல்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்படுவதோடு, பட்டா மாறுதல் செய்யும்போது தொடர்புடைய ஆவணங்களை வருவாய்த் துறையினர் இணைய வழியாகப் பார்வையிடவும் இயலும். பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிதானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் அமைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

click me!