சூரப்பா விசாரணை ஆணையம்..! அறிக்கை ரெடி..! காக்க வைக்கும் தமிழக அரசு?

By Selva KathirFirst Published Jul 24, 2021, 11:49 AM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழக பணி நியமனம், பேராசிரியர்கள் பதவி உயர்வு, நிர்வாக வசதிக்கு பொருட்கள் கொள்முதல் போன்றவற்றின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 200 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது சூரப்பா முறைகேடு செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் அறிக்கை தயார் செய்துவிட்ட போதும் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்திற்கு முதலில் ஒரு மாதம் மட்டுமே புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சூரப்பான மீதான புகார்கள் தொடர்ந்த நிலையில் அவ்வப்போது விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. அண்ணா பல்கலைக்கழக பணி நியமனம், பேராசிரியர்கள் பதவி உயர்வு, நிர்வாக வசதிக்கு பொருட்கள் கொள்முதல் போன்றவற்றின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 200 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டது.

இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அப்போதைய எதிர்கட்சிகள்கூட வலியுறுத்தி வந்தன. மேலும் தமிழக அரசு கடந்த ஆண்டு அரியர் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக சூரப்பாக ஏஐசிடிஇ வரை சென்றார். இதனால் டென்சன் ஆன தமிழக அரசு அண்ணா பல்கலைகழக முறைகேடு தொடர்பாக விசாரிக்க கலையரசன் தலைமையில் ஒரு நபர் கமிசனை அமைத்தது. இந்த கமிசன் சம்மன் அனுப்பியும் சூரப்பா நேரில் ஆஜராகவில்லை. மேலும் அவர் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தாலும் கூட விசாரணை ஆணையம் செயல்பாட்டில் தான் உள்ளது.

இந்த நிலையில் சூரப்பாவிற்கு எதிரான புகார்கள் குறித்து 100 சதவீதம் விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முறைகேடு புகார்கள் தொடர்பாக சில ஆதாரங்களுடன் அறிக்கையையும் கூட அவர் தயார் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசிடம் கலையரசன் நேரம் கேட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கலையரசன் அறிக்கை தாக்கல் செய்வதற்கு அரசுத் தரப்பில் இருந்து எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

பொதுவாக இது போன்ற விசாரணை ஆணையங்களின் அறிக்கை முதலமைச்சராக இருப்பவர்களிடம் தான் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய கலையரசன் அனுமதி கேட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் முதலமைச்சர் தரப்பில் தற்போது வரை நேரம் ஒதுக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். இதனால் இறுதி செய்யப்பட்ட அறிக்கையை என்ன செய்வது என்று நீதிபதி கலையரசன் தனக்கு தெரிந்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

click me!