கொங்கு மண்டலத்தில் அடுத்த விக்கெட்..! திமுகவிற்கு தாவும் சத்யபாமா?

By Selva KathirFirst Published Jul 24, 2021, 11:41 AM IST
Highlights

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபாமா. இவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உறவு முறை. செங்கோட்டையன் மூலமாக அதிமுகவில் வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா செங்கோட்டையனை கட்டம் கட்டிவிட்டு சத்யபாமாவிற்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்.

கொங்கு மண்டலத்தில் இருந்து அதிமுக பிரமுகர்களை வளைக்கும் திமுகவின் அடுத்த முயற்சிக்கு அடுத்த வெற்றி கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபாமா. இவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உறவு முறை. செங்கோட்டையன் மூலமாக அதிமுகவில் வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா செங்கோட்டையனை கட்டம் கட்டிவிட்டு சத்யபாமாவிற்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார். மேலும் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட சத்யபாமாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா திருப்பூர் எம்பியாகவும் செயல்பட்டார். திருப்பூர் எம்பியாக இருந்தாலும் அவர் முழுக்க முழுக்க ஈரோடு மாவட்டத்தில் தான் அரசியல் செய்து கொண்டிருந்தார்.

ஜெயலலிதா இருந்த வரை ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகராகவே சத்யபாமா வலம் வந்தார். ஆனால் அவர் மறைவிற்கு பிறகு செங்கோட்டையன் மறுபடியும் அமைச்சர் ஆக்கப்பட்டார். இதன் பிறகு சத்யபாமாவை செங்கோட்டையன் ஓரம்கட்டினார். இது குறித்து சத்யபாமா கட்சித் தலைமைக்கு பலமுறை புகார் கொடுத்தும் அவரால் கட்சியில் இழந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. தனது நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல அதிமுக நிகழ்ச்சிகள் எதிலும் சத்யபாமா கலந்து கொள்ள செங்கோட்டையன் தடை விதித்தார். இதனால் நேரடி அரசியலில் இருந்து சத்யபாமா விலகி இருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கொங்கு மண்டலத்தில் திமுக படு தோல்வியை சந்தித்தது. இதனால் கொங்கு மண்டலத்தில் கட்சியை சரி செய்ய அங்குள்ள அதிமுக பிரமுகர்களை குறி வைத்து திமுக இழுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக சத்யபாமாவிற்கு திமுக தரப்பு வலை விரித்ததாக சொல்கிறார்கள். அண்மையில் செங்கோட்டையனுக்கு ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரை சரி செய்ய அவருடன் இருந்த ஒருவர் தேவை என்கிற நிலையில் சிந்து ரவிச்சந்திரனை திமுக தரப்பு அணுகியுள்ளது. ஆனால் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை கொடுக்க சில இடையூறுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் தனது செல்வாக்கை நிரூபிக்க சத்யபாமாவிடம் பேசி அவரை திமுகவிற்கு அழைத்து வரும் அசைன்மென்டை சிந்து மிகச்சிறப்பாக முடித்துவிட்டதாக கூறுகிறார்கள். இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தேதி கொடுத்தால் சென்னையில் அவர் முன்னிலையில் சத்யபாமா திமுகவில் இணைவார் என்கிறார்கள்.

click me!