
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஜெ. மரணம் குறித்து 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்றுடன் 3 மாத அவகாசம் முடிவடைந்தபோது, விசாரணை ஆணையம் சார்பில் 6 மாத கால அவகாசம் கேட்டது. கால அவகாசத்துக்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்தது. தற்போதை கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஜெயலலிதா, சசிகலா தொடர்புடையவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபா, அவரது கணவர் மாதவன், வீட்டு பணியாளர்கள், ஜெயலலிதாவுக்கு செயலாளர்களாக இருந்தவர்கள் என விசாரணையை மேற்கொண்டது. மேலும் சசிகலாவின் வாக்குமூலத்தையும் ஆணையம் பெற்றுள்ளது. இதுவரை 37 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தின் முக்கிய மர்ம முடிச்சுக்கான ஆதாரம் ஆணையத்துக்கு கிடைத்துள்ளதா என்பது தெரியவில்லை. இதுவரை ஜெ மரணத்தில் சந்தேகம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆணையத்துக்கு பதில் ஏதும கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனாலும், விசாரணை ஆணையம் தீவிரமாக விசாரித்து வருகிறது.