ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற ஏராளமான ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் பல இடங்களில் பெண்கள் உட்பட ஏராளமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலையில் உருண்டு, புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது..
இதைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர்.. இதையடுத்து, தலைமை செயலகம் செல்லும் சாலையில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்பு அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடற்கரை சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளிலும் வாகன சோதனை நடக்கிறது. முன்னதாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து பேரணியாக தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த மேலும் சிலரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
இதனால் தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கடலூர் வழியாக 14 வாகனங்களில் சென்னை வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 135 பேரையும், மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பகுதியில் சென்னைக்கு போராட்டம் நடத்த கிளம்பிய ஜாக்டோ ஜியோ அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை அண்ணாசாலை மற்றும் சேப்பாக்கத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் கைது செய்தனர்.
தற்போது சேப்பாக்கதில்இருந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாலாஜா சாலையிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், தொடர்நது அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்