
கர்நாடக சட்டப் பேரவையில் நாளை நடைபெறவுள்ள ஃபுளோர் டெஸ்ட்டில் ஒரு மேஜிக் நடக்கும் என்றும், அந்த மேஜிக்கை காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்களே நடத்துவார்கள் என்றும் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையிவ் பாஜக 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரசுக்கு 78 பேரும், மஜத கட்சிக்கு 38 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேச்சைகள் 2 பேரும் உள்ளனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. பாஜகவுக்கு , பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்களை வளைக்க முயற்சி செய்து வருகிறது.
பாஜக குதிரைப் பேரம் நடத்தி காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடுவார்கள் என்பதால், அவர்களை அனைவரும் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள ஃபுளோர் டெஸ்ட்டில் பங்கேற்பதற்காக அவர்கள் தற்போது பெங்களூரு திருப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் பாஜக தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்காக நாங்கள் விடுதியில் உள்ளோம். எங்களுக்கு முழு மெஜாரிட்டி உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான பெரும்பான்மை உள்ளது என தெரிவித்தார்.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் நாங்கள் எப்படி பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய எடியூரப்பா, நாளை ஒரு மேஜிக் நடக்கும் என்றும். அதில் நாங்கள் ஜெயிப்போம் என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.