சசிகலா சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.. சி.வி.சண்முகம் வரிசையில் சசிகலாவுக்கு எதிராக கே.சி.வீரமணி தாறுமாறு!

By Asianet TamilFirst Published Jun 10, 2021, 8:39 PM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன. அது முழுக்கப் பொய்யான தகவல் என்று மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
 

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வாணியம்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வாணியம்பாடி தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுதிக்குட்பட்ட மக்கள் தொகுதி பிரச்சினைகளை இங்கே தெரிவித்து தீர்வு காணலாம். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீலை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றால், அதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். கடந்த சில நாட்களாகவே அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன. அது முழுக்கப் பொய்யான தகவல்.
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார். இதையேதான் முன்னாள் முதல்வர் பழனிசாமியும் கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் அதிமுகவினர் தெளிவாகவே உள்ளனர். தொண்டர்களைக் குழப்பவே இதுபோன்ற பொய்யான ஆடியோக்கள் வெளியிடப்படுகின்றன. சசிகலா கட்சியில் இணைய இனி வாய்ப்பே இல்லை. கட்சி உயர்மட்டக் குழு இதற்கான அறிவிப்பை வெளியிடும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை. இங்கு அதிமுக தொண்டர்களிடம் எந்தச் சலசலப்பும் இல்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் அதிமுகவை வழிநடத்தி வருகிறார்கள். கட்சித் தலைமையின் கட்டளையை நிறைவேற்றும் வகையிலேயே தொண்டர்களின் செயல்பாடு உள்ளது. முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை அவர் பலமுறை சந்தித்திருக்கிறார். சி.வி.சண்முகம் பனங்காட்டு நரி. அவர் எந்தச் சலசலப்புக்கும் அஞ்சமாட்டார். அவர் மட்டுமட்டுமல்ல, அதிமுகவினர் யாரும் அஞ்சமாட்டோம்.” என்று கே.சி.வீரமணி தெரிவித்தார்.
 

click me!