தேவைக்கு மீறி ஆக்சிஜன் இருந்தும் பல உயிர்களை இழந்துவிட்டோம்.. ஸ்டெர்லைட் பித்தலாட்டம்- சுற்றுச்சூழல் ஆர்வலர்.

By Ezhilarasan BabuFirst Published May 1, 2021, 4:13 PM IST
Highlights

இதைக் கொண்டு செல்வதற்கான முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால், பல நூற்றுக்கணக்கான இந்தியர்களை நாம் இழந்துள்ளோம். 16,000 டன்களை கொண்டுசெல்வதற்கான

தேவைக்கு மீறி ஆக்சிஜன் கையிருப்பு இருந்தும் அதை நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே பல உயிர்களை நாம் இழக்க காரணம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை திறந்துதான் நாம் ஆக்சிஜன் தயாரித்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பது மிகப் பெரிய பித்தலாட்டம் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கைபின்வருமாறு: 

இந்தியா ஆக்சிஜனுக்காக தத்தளித்த போது தேவையை விட நான்கு மடங்கு ஆக்சிஜன் எஃகு உருக்காலைகளின் சேமிப்பு தொட்டிகளில் இருந்தது என உச்சநீதி மன்றத்தில் மத்திய எஃகு அமைச்சகம் தகவல் தெரிவித்தது.  இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் கொடுமை என்ன தெரியுமா?  

கடந்த ஒருவாரமாக, அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் உச்சமாக ஆக்சிஜன் தேவைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் உள்ள sail எஃகு ஆலைகளில் மட்டும் சுமார் 16,500 டன் மருத்துவ திரவு ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது என்று எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகள் அதிகமாக இருந்த 12 மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தேவைப்பட்ட ஆக்சிஜன் அளவு 4,880 டன், ஆனால் சேமிப்பில் இருந்த கையிருப்பு தேவையை விட மூன்று மடங்கு. 

இதைக் கொண்டு செல்வதற்கான முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால், பல நூற்றுக்கணக்கான இந்தியர்களை நாம் இழந்துள்ளோம்  16,000 டன்களை கொண்டுசெல்வதற்கான 1,200 வாகனங்கள் நம்மிடம் உள்ளன, இருந்தும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாம் இழந்துள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் தயாரித்துதான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று சொல்வது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்தியாவில், கொரோனாவால் நிகழும் ஒவ்வொரு மரணத்திற்கும் இந்திய அரசே பொறுப்பேற்ற வேண்டும் எனவும், மோடியே காரணம் என உரக்கச் சொல்வோம். என அவர் அறிக்கையில் கூறியுள்ளார். 

click me!