காந்தியை நம்பியே இந்தியாவில் இணைந்தோம், மோடி இந்தியாவில் இருப்போம் என கனவில்கூட நினைக்கவில்லை. பரூக் அப்துல்லா

By Ezhilarasan BabuFirst Published Sep 26, 2020, 11:36 AM IST
Highlights

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீர் மக்கள் நினைத்திருந்தால் பாகிஸ்தானுடன் இணைந்திருக்கலாம், ஆனால் காஷ்மீர் மக்கள் காந்தியின் வழியில் இந்தியாவில் சேர்ந்தனர்.

காந்தியை நம்பியே இந்தியாவுடன் இணைந்தோம் என்றும், ஆனால் ஒருபோதும் மோடியின் இந்தியாவில் இருப்போம் என காஷ்மீரிகள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் தங்களை இந்தியர்களாகவே உணரவில்லை, அந்த அளவிற்கு அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு இந்திய ஆட்சியாளர்கள் தள்ளி விட்டனர் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, உண்மையாகச் சொல்லுகிறேன், காஷ்மீரில் வசிக்கும் மக்களில் ஒருவர் கூட தங்களை இந்தியர்கள் என்று அழைத்துக்கொள்ள விரும்பவில்லை. மத்திய அரசு யாரிடம் வேண்டுமானாலும் சென்று கேட்டு பார்க்கட்டும். 

அதே நேரம் காஷ்மீர் மக்கள் தங்களை பாகிஸ்தானியர்கள் என்றும் நினைக்கவில்லை, அதையும் நான் தெளிவுபடுத்தி விடுகிறேன். எப்படி நாங்கள் வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்பதே எங்களுக்கு வியப்பாக இருக்கிறது, அரசை நம்ப முடியவில்லை என்ற மனநிலைக்கு காஷ்மீர் மக்கள் வந்து விட்டது தான் இதுபோன்ற விரக்தி நிலைக்கு காரணம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீர் மக்கள் நினைத்திருந்தால் பாகிஸ்தானுடன் இணைந்திருக்கலாம், ஆனால் காஷ்மீர் மக்கள் காந்தியின் வழியில் இந்தியாவில் சேர்ந்தனர். 

அவர்கள் மோடியின் இந்தியாவில் இருப்போம் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஜம்மு காஷ்மீரில் இந்தியா பற்றி யார் பேசினாலும் அதை காது கொடுத்து கேட்பதற்கு ஒருவரும் தயார் நிலையில் இல்லை. இதற்கு இப்போதைய மத்திய அரசு தான் காரணம். ஒவ்வொரு தெருவிலும் இந்திய ராணுவத்தினர் ஏகே47 ரக துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கிறார்கள். இங்கே சுதந்திரம் என்பது எங்கே இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

click me!