கிங்பிஷர் விமானம் போல் ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்தமாட்டோம்....ஊழியர்கள் மத்திய அமைச்சர் உறுதி

First Published Dec 29, 2017, 8:43 AM IST
Highlights
We do not run Air India as Kingfisher Airlines...Asoke kajapathi raju


விஜய் மல்லையா நடத்திய கிங்பிஷர் விமான நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை இழந்தது போல், அரசு நடத்தும் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஊழியர்கள் யாருக்கும் வேலை பறிபோகாது, நாட்டுக்காக சேவை செய்ய விரும்புகிறது என்று மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு உறுதி அளித்தார்.

ரூ. 52 ஆயிரம் கோடி கடன்

ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ. 52 ஆயிரம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. இந்த நிறுவனத்துக்கு உதவும் வகையில் கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான முற்போக்கு கூட்டணி அரசு ரூ. 30 ஆயிரம் கோடி நிதி அளித்தது. இருந்தபோதிலும், அந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதில் அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்தது.

பங்குகள் விற்பனை

இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், ஏர் இந்தியாவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என அச்சம் நிலவியது.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு பேசியதாவது-

வேலை பறிபோகாது

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனா செய்ய முடிவுசெய்துள்ளது. அதற்காக விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் கடன் காரணமாக திவாலாகி, ஊழியர்கள் வேலை இழந்தது போல் நிலை வராது.

சேவை செய்யப்படும்

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவிதமான பணியும் பறிக்கப்படாது. யாரையும் வேலையிழக்க வைக்க அரசுக்கு விருப்பமில்லை. நாட்டுக்காக சேவை செய்ய ஏர் இந்தியா விரும்புகிறது. மக்களுக்கு சேவை செய்து, இன்னும் உயரத்தில் பறக்க விரும்புகிறது.

ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து நஷ்டத்தில் இருந்து மீட்கும் முடிவை நிதி அமைச்சர் தலைமையிலானகுழு ஆதரித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!