கோயில்களில் அர்ச்சனை, பூ, மாலை, பழம் வைத்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதி கிடையாது என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி முதல் ஞாயிறு வரை திறக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் எல்லா நாட்களிலும் வழிப்பாட்டுத்தலங்களை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கினார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இந்த அறிவிப்பு பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி என்றும் அக்கட்சித் தலைவர்கள் சிலர் சமூக ஊடகங்களிலும் பதிவிட்டனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மண்ணடியில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தமிழகத்தில் எல்லா நாட்களிலும் கோயில்களை வழிபாட்டுக்குத் திறக்க எடுக்கப்பட்ட முடிவு, எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது. மக்களின் கோரிக்கைகள், பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுதான் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எல்லா நாட்களும் கோயில்கள் திறந்தாலும், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தேவையான முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி குறித்து அறிவுறுத்தல் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதே நேரம் கோயில்களில் அர்ச்சனை, பூ, மாலை, பழம் வைத்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதி கிடையாது.” என்று சேகர்பாபு தெரிவித்தார்.