
ஜெயா தொலைக்காட்சியின் சிஇஓ விகேக் ஜெயராமன் முறைகேடாக வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது வருமான வரித் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப் பிரியா ஆகியோர், பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதோடு, போலியாக நிறுவனங்களை தொடங்கி , அதன் மூலம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குபின் புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றியிருக்கும் விவரங்கள் ரெய்டின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போன்று வெளி நாட்டு பண பரிவர்த்தனைகளையும் முறைகேடாக பயன்படுத்தியுள்ள விவரங்களும் தெரிய வந்துள்ளன.இதையடுத்து விவேக்கை
வருமான வரித் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பல மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் இருந்தே வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பாக பல முக்கிய விவரங்களை வருமான வரித் துறையினர் கறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விவேக் மற்றும் கிருஷ்ணப்பிரியாவிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வருமானவரித்துறையினர் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.
இந்த ரெய்டின் அடுத்த கட்டமாக அமலாக்கத் துறையினர்,வழக்கை கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவங்லகள் வெளியாகியுள்ளன. இதனால் விவேக் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
இதே போன்று கிருஷ்ணப் பிரியாவும் வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளில் முறைகேடாக ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணப் பிரியாவிடம் வருமான வரித் துறையினரும், அமலாக்கத் துறையினரும் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணப்பிரியா மீதும் அமலாக்கத்துறை வழக்கு பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது