இந்தியா சுதந்திரம் வாங்கியதில் இருந்து பொது மக்கள் அடிப்படை வசதிகளைத் தான் கேட்கிறார்கள் என்றும் அதைக்கூட அரசு செய்து கொடுப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ள நடிகர் விஷால் ஏன் இது நடப்பதில்லை ? அடிப்படை வசதிகளை குறித்து யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்ற கேள்வியை கேட்கத்தான் தேர்தலில் நிற்பதாகவும் தெரிவித்தார்.
வரும் 21 ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக, அதிமுக, டி.டி.வி.தினகரன், பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து அவரும் களமிறங்குகிறார். இன்று காலை அண்ணா நகரில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அங்கிருந்து விஷால் கிளம்பினார்.
இதையடுத்து சென்னை தியாகராயநகரில் உள்ள காமராஜர் சிலைக்கும் விஷால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் எம்ஜிஆரின் இல்லமான ராமாவரம் தோட்டத்துக்கு சென்ற விஷால், அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் ஒரு அரசியல் வாதி அல்ல என தெரிவித்தார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டே தேர்தலில் போட்டியிடப்போவதாக விஷால் கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பொது மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகவே போராடி வருகிறார்கள், ஆனால் அரசியல் வாதிகள் இதை ஏன் நிறைவேற்றித் தருவதில்லை என கேள்வி எழுப்பினார்?.
அடிப்படைத் தேவைகள் ஏன் நிறைவேற்றித்தரப்படுவதில்லை? யாரிடம் சொன்னால் வேலை நடக்கும்? இது போன்ற கேள்விகள் மக்கள் மனதில் மட்டுமல்லாமல் தன் மனதிலும் இருப்பதாக கூறினார். இதற்கு ஒரு பதில் கிடைக்கவே தேர்தலில் நிற்பதாக விஷால் தெரிவித்தார்.
கமலஹாசன் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளித்த விஷால், பொது மக்களின் தைரியம்தான் எனக்கு ஆதரவு என்றும் கூறினார்.